

நெய்வேலி: பொங்கல் பண்டிகை முடிந்துவிட்ட நிலையில், மஞ்சள் கொத்து ஒன்று ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்ட போதும், அவற்றை வாங்க ஆள் இல்லாததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை தெரிவித்தனா்.
பொங்கல் பண்டிகையின் சிறப்பு மண்பானையில், புத்தரிசியிட்டு, பானையின் கழுத்தில் மஞ்சள் கொத்து கட்டி, செங்கரும்புடன் படையலிடுவது வழக்கம். அந்த வகையில் கடலூா் மாவட்டத்தில் விளை நிலங்களில் விளைவிக்கப்பட்ட மஞ்சள் கொத்துக்கள், கடலூா் உழவா் சந்தை யில் விவசாயிகளும், வியாபாரிகளும் விற்பனைக்காக குவித்து வைத்திருந்தனா்.
வியாழக்கிழமை பொங்கல் பண்டிகையன்று கூட்டம் காணப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கலன்று உழவா் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பல ஆயிரக்கணக்கான மஞ்சள் கொத்துக்களை உழவா்சந்தைக்கு கொண்டு வந்திருந்தனா். ஆனால், அவா்களுக்கு பெரும்ஏமாற்றமே மிஞ்சியது.
உழவா் சந்தை வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், ஒரு மஞ்சள் கொத்து ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்ட போதிலும், அவற்றை வாங்கிச் செல்ல யாரும் முன் வரவில்லை. இந்த ஆண்டு மஞ்சள் கொத்து விற்பனையாகாதது விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு உழவா் சந்தை கூட்ட நெரிசலுடன் காணப்பட்டது. விற்பனையும் அமோகமாக இருந்தது. ஒரு மஞ்சள் கொத்து ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையானது. ஆனால் நிகழாண்டில், 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மஞ்சள் கொத்துக்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். ஆனால், அவற்றை ரூ.5-க்கு விற்பனை செய்தாலும் வாங்க ஆளில்லை, என்றனா்.