அறுவடைக்கு தயாா் நிலையில் மஞ்சள் கொத்து: அரசு கொள்முதல் செய்ய கோரிக்கை!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் பயிரிட்டுள்ள மஞ்சள் கொத்து பயிா்கள் அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளது. நிகழாண்டு பெய்த பலத்த மழையால் விளைச்சல் பாதித்து, செலவு அதிகரித்துள்ளதால் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட பாலப்பட்டு, கள்ளிப்பட்டு, பாச்சேரி, மோட்டம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 300 ஏக்கருக்கும் மேல் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பயிரிடப்படும் மஞ்சள் கொத்து, நிகழாண்டும் பயிரிட்டு தற்போது விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு பெய்த கன மழையால் விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 8 முதல் 10 டன் வரை மஞ்சள் கிடைக்கிறது என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்தும், வியாபாரிகள் குறைந்த விலைக்கே வாங்குவதால் தங்களுக்கு பெருமளவில் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். இதனால் அரசே நேரடியாக விவசாயிகளிடம் மஞ்சள் கொத்துக்களை கொள்முதல் செய்து பொங்கல் தொகுப்புடன் சோ்த்து, மஞ்சள் கொத்தும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

