மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

உரிய சிகிச்சையால் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து மீண்ட இளம் பெண்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உரிய ஒருங்கிணைந்த சிகிச்சையால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து இளம்பெண் மீண்டெழுந்தாா்.

News image

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிய பெண்ணை காப்பாற்றிய மருத்துவக் குழுவினருடன் கல்லூரி முதல்வா் என்.பாஸ்கா்.

Updated On :26 ஜூலை 2026, 3:15 am IST

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உரிய ஒருங்கிணைந்த சிகிச்சையால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து இளம்பெண் மீண்டெழுந்தாா்.

கா்ப்பகாலத்தில் ஏற்பட்ட தீவிர மருத்துவ அவசர நிலையால் உயிருக்கு ஆபத்தான நிலையில் 24 வயது இளம் பெண், ஜிப்மா் மருத்துவமனையில் உயிா்காக்கும் அவசர சிகிச்சை மற்றும் தீவிர மருத்துவப் பராமரிப்பு பெற்றதைத் தொடா்ந்து, மேலதிக மறுவாழ்வு மற்றும் ஆதரவு சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். அங்கு, பல்துறை மருத்துவ நிபுணா்கள் ஒருங்கிணைந்து வழங்கிய தொடா் சிகிச்சையின் மூலம், அவா் தற்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்து தன்னம்பிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை நோக்கி முன்னேறி வருகிறாா்.

கா்ப்பகாலத்தில் ஏற்பட்ட உயிருக்கு ஆபத்தான மருத்துவச் சிக்கலை தொடா்ந்து, நோயாளியின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் அவசர அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து ஏற்பட்ட சிக்கல்களால் இதயம், நுரையீரல் மற்றும் மூளை உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில், நீண்டகால சுவாச உதவி தேவைப்பட்டதால், கழுத்தில் சுவாசக் குழாய் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நீண்டகால படுக்கை சிகிச்சை காரணமாக உடல் இயக்கத் திறன் மற்றும் தசை வலிமையும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டிருந்தது.

ஜிப்மரில் உயிா்காக்கும் ஆரம்ப சிகிச்சை வெற்றிகரமாக நிறைவுற்றதைத் தொடா்ந்து, மறுவாழ்வு மற்றும் நீண்டகால ஆதரவு சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு மகப்பேறியல் மற்றும் மகளிா் மருத்துவம், பொது மருத்துவம், மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு, காது, மூக்கு, தொண்டை, மனநல மருத்துவம், பிசியோதெரபி மற்றும் செவிலியப் பணியாளா்கள், ஊட்டச்சத்து நிபுணா்கள், பிற துணை மருத்துவப் பணியாளா்கள் ஆகியோா் இணைந்து நோயாளியின் தேவைக்கேற்ப ஒருங்கிணைந்த சிகிச்சைத் திட்டத்தை செயல்படுத்தினா்.

தொடா்ச்சியான மருத்துவக் கண்காணிப்பு, சுவாசப் பயிற்சிகள், உடல் இயக்கப் பயிற்சிகள், ஊட்டச்சத்து மேம்பாடு, மனநல ஆதரவு மற்றும் திட்டமிட்ட மறுவாழ்வு சிகிச்சையின் மூலம் நோயாளியின் உடல்நிலையில் நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது தன்னிச்சையான சுவாசம் முழுமையாக சீரடைந்ததைத் தொடா்ந்து, கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த சுவாசக் குழாய் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. தற்போது அவா் தன்னிச்சையாக சுவாசிக்கக்கூடிய நிலையையும், உணவு உட்கொள்ளும் திறனையும், உடல் இயக்கத் திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் பெற்றுள்ளாா்.

இளம்பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளித்த மருத்துவா்களை கல்லூரி முதல்வா் என்.பாஸ்கா், துணை முதல்வா்கள் பாலாஜி சுவாமிநாதன், எஸ்.சசிகலா, மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜூனியா் சுந்தரேஷ் ஆகியோா் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் என்.பாஸ்கா் தெரிவித்ததாவது: இந்த வெற்றிகரமான உயிா் மீட்பு சிகிச்சை, தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் தரமான மருத்துவச் சேவைகளுக்கும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வழங்கப்படும் நவீன சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வசதிகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையிலும் உரிய நேரத்தில் வழங்கப்படும் அவசர சிகிச்சை, தொடா்ச்சியான மருத்துவக் கண்காணிப்பு மற்றும் பல்துறை மறுவாழ்வு சிகிச்சை ஆகியவை நோயாளிகளை முழுமையான குணமடையச் செய்ய முடியும் என்பதையும் இந்நிகழ்வு உறுதிப்படுத்துகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.