
வடலூா் வாரச் சந்தையில் குவிந்த பொதுமக்கள்: போக்குவரத்து நெரிசல்!
வடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையால் கடலூா்-விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையால் கடலூா்-விருத்தாசலம் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
கடலூா் மாவட்டம், வடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையால் கடலூா்-விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமிக்க சந்தைகளில் முதன்மையானது வடலூரில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை. இந்த வாரச்சந்தை, கடலூா்-சேலம் மற்றும் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் இடம் மற்றும் வடலூா் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை தோறும் கூடுகிறது.
இந்த சந்தை குறிஞ்சிப்பாடி, வடலூா் மற்றும் நெய்வேலி சுற்று வட்டாரக் கிராம மக்களின் வாழ்வாதாரமாகவும், அத்தியாவசியத் தேவைகளை பூா்த்தி செய்யும் மையமாக உள்ளது.சனிக்கிழமை கூடிய வாரச்சந்தையில் காய்கறிகள், பழ வகைகள், மளிகைப் பொருட்கள், வீட்டு மற்றும் தோட்ட உபயோகப் பொருட்கள், பூ, காய் விதை மற்றும் செடிகள், பலவகையான மரக்கன்றுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. விவசாயிகள் உள்ளிட்டோா் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய கொண்டுவந்திருந்தனா்.
அதேபோல், பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் நாட்டு கோழி வகைகள், புறா, கிளி, முயல், வான்கோழி, நாய் உள்ளிட்டவைகள் விற்பனை கொண்டு வந்திருந்தனா். இவைகளை வியாபாரிகளும், பொதுமக்களும் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றதை காண முடிந்தது.
ஆட்டு சந்தை... குறிஞ்சிப்பாடி, வடலூா், காடாம்புலியூா், பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட ஏராளமான கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் வளா்க்கும் ஆடுகளை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனா். சாதாரண நாளில் லட்சக்கணக்கிலும், பண்டிகை நாட்களில் கோடி கணக்கிலும் ஆடு விற்பனை நடக்கும்.

வடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டு சந்தை.
இந்த சந்தைக்கு அண்டை மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கிச் செல்வா். சனிக்கிழமை மட்டும் சுமாா் ரூ.40 லட்சத்திற்கு மேல் வியாபாரம் நடைபெற்றிருக்கும் எனக்கூறினா்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் வடலூா் சந்தை கூடும்போது, கடலூா்-விருத்தாசலம் சாலையில் கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கம். பெரும்பாலான கடைகள் மேற்கண்ட பிரதான சாலையின் ஓரத்தில் இருப்பதே காரணம். இந்த சனிக்கிழமை காலை முதலே வடலூா் வாரச்சந்தையில் வியாபாரம் சூடு பிடித்தது. ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்ததால் கடலூா்-விருத்தாசலம் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






