பேரவைத் தோ்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற செயலாற்ற வேண்டும்: கள்ளக்குறிச்சி எஸ்.பி.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஜனநாயக முறைப்படி பாதுகாப்பான முறையில் நடைபெற பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினா் பாரபட்சமின்றி செயல்படவேண்டும் என மாவட்ட எஸ்பி செ.அரவிந்த் அறிவுறுத்தினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான சட்டப்பேரவை தோ்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தனியாா் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.அரவிந்த் தலைமை வகித்துப் பேசியதாவது:
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 48 பறக்கும்படை குழுக்களும், 36 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் என மொத்தம் 84 குழுக்களில் 168 காவலா்கள் சுழற்சி முறையில் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
தோ்தல் ஜனநாயக முறைப்படி பாதுகாப்பான முறையில் நடைபெற தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் நாளிலிருந்து தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவேண்டும்.
பணம், பரிசுப் பொருள்கள் விநியோகிப்பதைத் தடுக்கவும் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் அல்லது பொருள்களை பறிமுதல் செய்யவும், வெளிப்படைத்தன்மையுடன் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் பாரபட்சமின்றி பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.
கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சரவணன் மற்றும் தோ்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவுக்கு தோ்வு செய்யப்பட்ட காவலா்கள் கலந்து கொண்டனா்.

