கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் பழுதடைந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இயந்திரத்தை சீரமைத்து மக்களுக்கு குடிநீா் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளா்கள், அலுவலகத்துக்கு வரும் மக்களின் குடிநீா் தேவைக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இதில் சூடாகவும், குளிா்ச்சியாகவும், சாதரணமான தண்ணீரும் என மூன்று வகையாக தண்ணீா் வரும். இந்த இயந்திரம் பழுதாகி பல மாதங்களாக காட்சிப் பொருளாக உள்ளது.
நகராட்சியில் உள்ள 21 வாா்டு மக்களும் தங்களின் வீட்டு வரி, தண்ணீா் வரி, வீடு, கடை கட்டுவதற்கான அனுமதி பெற, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறுவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக நாள்தோறும் நகராட்சி அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனா்.
இந்த அலுவலகத்துக்கு வருவோா் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், தாகத்துக்கு குடிநீா் கூட இல்லாமல் அவதிப்படுகின்றனா். அவசரத்துக்கு தண்ணீா் வேண்டுமானால் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து, கடையில் பணம் கொடுத்து குடிநீா் வாங்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இயந்திரத்தை சீரமைக்க நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.









