நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வருகிற செப்.11-ஆம் தேதி வரை மட்டுமே பேரவைக்குள் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக புதுவை சட்டப்பேரவையில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுவை சட்டப்பேரவையில் நிதி ஒதுக்கீடு தொடர்பான மசோதா நிறைவேற்றிய பின்னர் நடைபெற்ற விவாதம்:
லட்சுமி நாராயணன் (காங்கிரஸ்): புதுவை சட்டப்பேரவைக்கு மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் 3 நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்துள்ளது. அவர்களை பேரவைக்குள் அனுமதிக்கக் கூடாது. ஏனெனில், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக உரிமை மீறல் கடிதம் தந்துள்ளேன்.
அரசுக் கொறடா அனந்தராமன்: புதுவை சட்டப்பேரவை, அமைச்சரவை மற்றும் முதல்வரைக் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலர் 23.6.2017 அன்று சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிப்பதாக போதுமான விவரங்கள் இல்லாமல் அறிவிக்கை வெளியிட்டார்.
இதுதொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 19 -ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் நியமன எம்எல்ஏக்களை பேரவைக்குள் பேரவைத் தலைவர் அனுமதிப்பார் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தது. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு எந்தவித குந்தகமும் ஏற்படாத வகையில், பேரவையில் நியமன எம்எல்ஏக்களை அனுமதித்துள்ளீர்கள்.
ஆனால், மத்தியில் ஆளும் கட்சி, இந்திய ஆட்சிப் பகுதி முழுவதும் பெரும்பான்மை மக்களின் முடிவுக்கு விரோதமாக இருந்தாலும் தாங்களே எப்படியாவது ஆளவேண்டும் என்ற குறுகிய எண்ணத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துள்ளது.
அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கொள்கைகளான பெரும்பான்மை மக்களாட்சி தத்துவத்தை காக்கும் பொருட்டும், உச்ச நீதிமன்ற மாண்பை நிலைநிறுத்தும் பொருட்டும், குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 55-இன் கீழ் நியமன எம்எல்ஏக்களுக்கு எந்த ஒரு மாநிலத்திலும் வாக்குரிமை இல்லை. அதனால், மூன்று நியமன எம்எல்ஏக்களுக்கும் இந்த சட்டப்பேரவையில் எந்த ஒரு வாக்கெடுப்பிலும் வாக்களிக்கும் உரிமை இல்லை என்ற தீர்மானத்தை பேரவையில் நிறைவேற்ற வேண்டும்.
சட்டப்பேரவையானது இந்த 3 நியமன எம்எல்ஏக்களையும் உச்ச நீதிமன்ற எதிர்பார்ப்புக்கு இணங்க மட்டுமே அனுமதிக்கிறதே தவிர, வேறு எந்த உத்தரவின்படியோ அல்லது அறிவிக்கையின்படியோ அனுமதிக்கவில்லை என்பதையும் பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.
பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம்: உச்ச நீதிமன்ற எதிர்பார்ப்புக்கு இணங்க 3 பேரையும் பேரவையின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதித்துள்ளேன். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 11.9.18 அன்று விசாரணைக்கு வருகிறது. அதுவரை மட்டுமே இந்த அனுமதி பொருந்தும். அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். இதையடுத்து, தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் விட்டார். இதைத் தொடர்ந்து பெரும்பாலான உறுப்பினர்கள் ஆம் என்று தெரிவித்ததால், தீர்மானம் நிறைவேறியதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கில் ஊடகர் கைது: காவல் துறை விளக்கம்!
விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்! இந்திய அணி 233 ரன்களுக்கு ஆல்-அவுட்!

அமெரிக்காவுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்! சௌதி அரேபியா கண்டனம்!

அன்பே டயானா படக்குழுவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


