புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யாததைக் கண்டித்து, எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்து முழக்கம் எழுப்பிய திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி 15-வது சட்டப் பேரவையின் இரண்டாவது கூட்டம் காலை 9:30 மணி அளவில் சட்டமன்ற மைய மண்டபத்தில் கூடியது. பேரவைத் தலைவர் செல்வம் திருக்குறளுடன் சபையை நடத்த தொடங்கியதும், எழுந்து நின்ற திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், முழு பட்ஜெட் இல்லை எனக்கூறியும், பேரவையில் மக்கள் பிரச்னையை விவாதிக்க அதிகநாள் சபையை நடத்த வேண்டும், நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் இயற்ற வேண்டும், அரசுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்து, முழக்கமிட்ட அவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில், திமுக எம் எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
இதனால் சிறிது நேரம் சட்டப்பேரவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற சட்டப்பேரவையில் 2022 ஆம் ஆண்டிற்கான ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகஸ்டு என 5 மாதங்களுக்கு ரூ.3612 கோடி ரூபாய் செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி பிரச்னைகள் குறித்து சுருக்கமாக பேசி வருகின்றனர்.