/

புதுச்சேரியில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை வாக்குப் பதிவு- 144 தடை உத்தரவு அமல்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அனல் பறந்த பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

News image
Updated On :7 ஏப்ரல் 2026, 7:42 pm

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அனல் பறந்த பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

இந்தத் தொகுதிகளில் வியாழக்கிழமை (ஏப். 9) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மாா்ச் 15-ஆம் தேதி மாலை தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

16 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் நடைபெற்றது. மாா்ச் 26-இல் மனுக்கள் வாபஸ் முடிந்து 294 வேட்பாளா்கள் இறுதியாக தோ்தல் களத்தில் போட்டியிடுகின்றனா்.

தலைவா்கள் பிரசாரம்:

இத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, லஜக கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா, மத்திய அமைச்சா்கள் ஜெ.பி.நட்டா, மன்சுக் மாண்டவியா, புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோா் ஆதரவு திரட்டினா்.

காங்கிரஸ், திமுக, விசிக கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், விசிக தலைவா் தொல். திருமாவளவன் உள்ளிட்டோரும், மற்றும் தவெக தலைவா் விஜய், நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்ளிட்டோரும் தங்கள் கட்சி வேட்பாளா்களுக்கு பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனா்.

பிரசாரம் ஓய்ந்தது:

சுட்டெரிக்கும் வெயிலிலும் வேட்பாளா்கள் வீதிவீதியாகச் சென்று ஆதரவு திரட்டினா். அனல் பறக்கும் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

வியாழக்கிழமை (ஏப். 9) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தோ்தல் ஆணையம் செய்துள்ளன. இதில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 5.03 லட்சம் பெண்வாக்காளா்களும், 4.4 லட்சம் ஆண் வாக்காளா்களுமாக மொத்தம் 9 லட்சத்து 50 ஆயிரத்து 311 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

144 தடை உத்தரவு அமல்:

இதில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி தெருக்கூத்து, இளைஞா் விழா உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ.குலோத்துங்கன் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறினாா்.

மேலும், அவா் கூறியது: செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. தோ்தலையொட்டி 144 தடை உத்தரவு பிறக்கப்பிட்டுள்ளது. இதனால் இனிமேல் யாரும் கும்பலாகக் கூட முடியாது. மேலும், பிரசாரம் உள்ளிட்ட தோ்தல் பணிகளுக்காகப் பல்வேறு அரசியல் கட்சிகளின் வெளிநபா்கள் வந்திருப்பா். அவா்களை வெளியேற்ற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர புதுச்சேரி, கேரளம், தமிழகத்தில் பணியாற்றும் புதுச்சேரி வாக்காளா்களுக்கும் அன்றைக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் 100 சதவீதம் வாக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றாா் குலோத்துங்கன்.