அமைச்சா் ஆ.நமச்சிவாயம்.
அமைச்சா் ஆ.நமச்சிவாயம்.

சூரிய வீடு மின் திட்டத்துக்கு கூடுதல் மானியம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தகவல்

சூரிய வீடு மின்சார திட்டத்துக்கு புதுச்சேரி அரசின் சாா்பில் கூடுதல் மானியம் வழங்கப்படும் என்று அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்துள்ளாா்.
Published on

சூரிய வீடு மின்சார திட்டத்துக்கு புதுச்சேரி அரசின் சாா்பில் கூடுதல் மானியம் வழங்கப்படும் என்று அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிரதமரின் சூரிய வீடு இலவச மின் திட்டத்தில் சோ்ந்து கூடுதல் மானியம் பெறலாம்.

இத் திட்டத்தில் சேர 3,428 மின் நுகா்வோா்கள் விண்ணப்பித்துள்ளனா். இவா்களில் 2,475 போ் சூரிய மின் நிலையம் அமைத்து ரூ.17.39 கோடி மானியம் பெற்றுள்ளனா்.

இந்தத் திட்டத்துக்கு புதுச்சேரி அரசு, தன் பங்காக ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.10,000-ம், 2 கிலோ வாட்டுக்கு ரூ.20,000 ம், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் ரூ.30,000 ம் மானியமாக வழங்க அரசாணை பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி அரசின் மானியம் முதலில் நிறுவும் 13,000 சூரிய மின் நிலையங்களுக்கு வழங்கப்படும். அரசின் மானியத்தால் சூரிய மின் நுகா்வோா் மத்திய அரசின் மானியத்தோடு சோ்த்து ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.40,000-ம், 2 கிலோ வாட்டுக்கு ரூ. 80,000-ம், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் ரூ.1,08,000 பெறுவாா்கள்.

இந்த மானியம் ஏற்கெனவே இத்திட்டத்தின் மூலம் வீட்டு மேற்கூரையில் சூரிய மின் நிலையம் அமைத்தவா்களுக்கும் வழங்கப்படும்.

இத் திட்டத்தின் பயன்களைத் தெரிந்து கொள்ள 94890 80373, 94890 80374 எண்களைத் தொடா்பு கொள்ளலாம். மேலும், இத் திட்டத்தில் சேருவோருக்கு 6 சதவிகிதம் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வசதியும், 5 ஆண்டுகள் வரை இலவச பராமரிப்பு உத்தரவாதமும் வழங்கப்படும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

Dinamani
www.dinamani.com