"தினமணி' சார்பில் கல்விக் கண்காட்சி விழுப்புரத்தில் வருகிற சனிக்கிழமை (பிப். 24) தொடங்கி இரு தினங்கள் நடைபெறுகிறது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், உயர் கல்வியைத் தொடர்வதற்கு ஆலோசனை வழங்கும் விதமாக, "தினமணி' சார்பில் "கல்விக் கண்காட்சி-2018' விழுப்புரத்தில் சனிக்கிழமை தொடங்குகிறது. விழுப்புரம் இ.எஸ். கல்விக் குழுமம், ஆரணி இரும்பேடு ஏசிஎஸ் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இந்தக் கல்விக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே, திருச்சி சாலையில் உள்ள விவிஏ மீனாட்சி ஆறுமுகம் மகாலில் காலை 10.30 மணிக்கு கல்விக் கண்காட்சி தொடங்குகிறது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கண்காட்சியைத் தொடக்கி வைக்கிறார்.
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரிச் செயலாளர் எஸ்.செந்தில்குமார், ஆரணி ஏசிஎஸ் கல்விக் குழுமத்தின் தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார், விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்தக் கல்விக் கண்காட்சியில், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொள்கின்றனர். கல்விக் கண்காட்சியில், மாணவர்கள் ஒரே இடத்தில் பார்வையிட்டு உயர்கல்வி வாய்ப்புகளைத் தெரிந்துகொள்ளும் விதத்தில், தமிழகம், புதுவை பகுதிகளைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெறுகின்றன.
சிறந்த படிப்புகளையும், கல்லூரிகளையும் தேர்வு செய்வதற்கான வழிமுறைகள், நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான ஆலோசனைகள், கல்வி சார்ந்த நிபுணர்களின் தொழில் துறை வழிகாட்டுதல் கருத்தரங்குகள், சிறப்புரைகள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன. இந்தக் கண்காட்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு குறிப்பேடு, நீட் தேர்வு வழிகாட்டுதல் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
சனிக்கிழமை காலை 10.30 மணிக்குத் தொடங்கும் முதல் நாள் கல்விக் கண்காட்சி இரவு 7.30 மணி வரை நடைபெறும். தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 7.30 மணிக்கு நிறைவடைகிறது.
இந்தக் கல்விக் கண்காட்சியில் பங்கேற்று மாணவர்கள் தங்களுக்குத் தேவையான உயர்படிப்புகளைத் தேர்வு செய்து பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.