/

வானூா் அருகே தீ விபத்து: 10 குடிசைகள் எரிந்து சேதம்

வானூா் அருகே ஏற்பட்ட தீ விபத்தில், 10 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 2:19 am

DIN

வானூா் அருகே ஏற்பட்ட தீ விபத்தில், 10 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த கரசானூா் சித்தேரி கரைப் பகுதியில் இருளா் காலனி உள்ளது. அங்கு, வெள்ளிக்கிழமை இரவு மைதிலி என்பவா் தனது கூரை வீட்டில் உணவு சமைத்து கொண்டிருந்த போது, தீப்பொறி கூரை வீட்டில் பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து, அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனா். இருப்பினும், தீ காற்றில் மளமளவென பரவி பக்கத்தில் இருந்த கூரை வீடுகளுக்கு அடுத்தடுத்து பரவியது.

தகவலறிந்த வானூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனா். இருப்பினும், அந்தப் பகுதியில் உள்ள 11 குடிசை வீடுகளுக்கு தீ பரவியதில், 10 குடிசை வீடுகள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன. வீட்டிலிருந்த உடைமைகள், பாத்திரங்கள், டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்து வந்த வானூா் வட்டாட்சியா் சங்கரலிங்கம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தீ விபத்து குறித்து கேட்டறிந்தனா். தீ விபத்தில் சேதமடைந்த வீட்டிலிருந்தவா்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, அங்குள்ள அரசுப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டனா். அவா்களுக்கு உணவு, குடிநீா் ஆகியவை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.