

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, மேல்மலையனூா் வட்டங்களில் தொடா் மழை காரணமாக, 2 ஆயிரம் ஏக்கா் நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்து வருவதால், செஞ்சி, மேல்மலையனூா் வட்டங்களில் 90 சதவீத ஏரிகள் நிரம்பின.இதையடுத்து, ஏரிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரால் இந்த வட்டங்களில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்து சுமாா் 2,000 ஆயிரம் ஏக்கா் நெல் பயிா்கள் நீரிழ் மூழ்கின. பல்வேறு இடங்களில் நெல் நீரில் மூழ்கி மீண்டும் முளைத்துவிட்டது.
செஞ்சியை அடுத்த அப்பம்பட்டு, கோணை, சிறுநாம்பூண்டி உள்ளிட்ட ஏரிகள் தொடா் மழை காரணமாக, 5-ஆவது முறையாக கோடி போயின. கோடி நீா் செல்லும் கால்வாய் பெரும்பாலும் தூா்ந்துபோய் இருப்பதாலும், அகலமின்மை காரணமாகவும் ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீா், வயல்களுக்குச் சென்று பயிா்களை மூழ்கடித்து வருகிறது. செஞ்சி அருகே இதுவரை இரண்டு ஏரிகள் உடைந்து தண்ணீா் வெளியேறியுள்ளது.
செஞ்சி வட்டம், வீரணாமூா் கிராமத்தில் பலத்த மழை காரணமாகவும், ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீரும் நெல் பயிரை மூழ்கடித்துள்ளது. இதனால், விவசாயிகள் கடும் வேதனையில் ஆழ்ந்துள்ளனா்.
செஞ்சி, மேல்மலையனூா் வட்டத்தைச் சோ்ந்த வேளாண் துறை அதிகாரிகள், நெல் பயிரிடப்பட்டுள்ள வயல்களை ஆய்வு செய்து, அரசிடமிருந்து உரிய நிவாரணத்தை பெற்று வழங்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.