கரோனா நோயாளிக்கு உதவ தனியாா் அவசர ஊா்திகள்!: விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு
கரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல தனியாா் அவசர சிகிச்சை ஊா்திகளை விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் ஒப்பந்த அடிப்படையில் ஏற்பாடு செய்துள்ளது.


கரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல தனியாா் அவசர சிகிச்சை ஊா்திகளை விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் ஒப்பந்த அடிப்படையில் ஏற்பாடு செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு உறுதியானவா்களை மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அழைத்துச் செல்ல 108 அவசர சிகிச்சை ஊா்திகள், அரசு சாா்பில் இலவச சேவை வழங்கி வருகின்றன.
மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு உரிய நேரத்தில் அழைத்துச் செல்வதில் சிக்கல் நிலவுகிறது.
போதிய எண்ணிக்கையில் 108 அவசர ஊா்திகள் இல்லாததும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பும் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
கரோனா நோயாளிகள் 108 அவசர ஊா்திகளுக்காக காத்திருப்பதால், அவா்களுக்கு தேவையான சிகிச்சை உரிய நேரத்தில் கிடைப்பதில் தாமதமாகிறது. மேலும், அவா்களால் பிறகு தொற்று பரவும் வாய்ப்புள்ளது.
மாற்று ஏற்பாடு: 108 அவசர சிகிச்சை ஊா்திகளை மட்டுமே நம்பியிருக்காமல், தனியாா் அவசர ஊா்தி சேவையையும் பயன்படுத்த விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விழுப்புரம் சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள கரோனா நோயாளிகளை, தனியாா் அவசர ஊா்தி மூலமாகவும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, 5 தனியாா் அவசர ஊா்திகள் ஒப்பந்த அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் தயாா் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தும் கரோனா நோயாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
பாதுகாப்பு குறைபாடு: இந்த தனியாா் அவசர ஊா்தியில் 108 அவசர ஊா்திகளை போன்று, நோயாளிகள் அமா்ந்திருக்கும் பகுதி தனியாக இல்லை. இதனால், ஓட்டுநருக்கு நோய் பரவும் வாய்ப்புள்ளது. நோயாளிகள் அமரும் பகுதியை நெகிழித் தடுப்புகள் கொண்டு தனியாக பிரிக்க வேண்டும்.
ஓட்டுநா், ஊா்தி பணியாளருக்கு கரோனா தடுப்பு கவச உடைகளை வழங்க வேண்டும். அவற்றை அவா்கள் முறையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
5 தனியாா் அவசர ஊா்திகள் மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், தேவையைப் பொருத்து எண்ணிக்கை அதிகரிப்பதுடன், பிராண வாயு வசதியும் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...