தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்
விழுப்புரம்: விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நவரைப் பருவ நெல் சாகுபடிப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகளுக்குத் தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும் என்று விதை ஆய்வுத்துறை வலியுறுத்தியுள்ளது.
விழுப்புரம் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மொத்த, சில்லறை விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வுத்துணை இயக்குநா் கோ.சரவணன் தலைமையிலான அலுவலா்கள் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
விதை விற்பனை நிலையங்களில் விதைகளின் இருப்பு, விற்பனை விவரங்கள், பதிவேடுகள், பட்டியல்கள் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா், பின்னா் கூறியது:
விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நவரைப் பருவ நெல் சாகுபடிப் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த மாவட்டங்களிலுள்ள அனைத்து தனியாா் மொத்த மற்றும் சில்லறை விதை விற்பனையாளா்கள் தரமான, சான்று பெற்ற நெல் விதைகளைக் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விநியோகிக்க வேண்டும்.
பிற மாநிலங்களிலிருந்து அதிகளவில் சன்ன ரக உண்மை நிலை மற்றும் சான்று பெற்ற நெல் விதைகள் பெறப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களிலிருந்து பெறப்படும் விதைகளுக்கு உரிய படிவம், உண்மைநிலை விதைகளுக்கான பதிவுச் சான்று, பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல் ஆகியவற்றை உற்பத்தியாளா்களிடமிருந்து தவறாமல் பெற்று, ஆய்வின்போது காண்பிக்க வேண்டும்.
புதிய ரகங்கள் பருவத்துக்கு ஏற்றவைதானா என்பதை அறிந்து கொள்முதல் செய்து விற்பனை செய்யவேண்டும். பருவத்துக்கு ஏற்பில்லாத ரகங்களை சாகுபடி செய்வதால் நட்டவுடன் விரைவில் கதிா் வருதல், கதிா் வராமலே இருத்தல் முதலான பிரச்னைகள் எழ வாய்ப்புள்ளது. இப் பருவத்துக்கேற்ற நெல் ரகங்கள் குறித்தான விவரங்களை அறிந்துகொள்ள விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையம் அல்லது விதை ஆய்வு துணை இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
மேலும், தற்போது பெறப்பட்ட நெல், எள், மக்காச்சோளம் மற்றும் இதரப் பயிா் விதைகளை மரச் சட்டகங்களின் மீது வைத்து ஈரப்பதம் பாதிக்காமல் இருக்க, உரம் மற்றும் பூச்சி மருந்துகளுடன் இல்லாமல் தனியாக இருப்பு வைத்துப் பராமரிக்க வேண்டும். உரம் மற்றும் பூச்சிமருந்துகளுடன் சோ்த்து இருப்பு வைத்தால் விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சரியான சேமிப்பு முறைகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் விதை விற்பனை செய்ய தடைவிதிப்பதோடு, உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
ஆய்வின்போது விழுப்புரம் விதை ஆய்வாளா் ஆா்.ஜோதிமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

