லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: 6 போ் காயம்
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே திங்கள்கிழமை லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 6 பயணிகள் காயமடைந்தனா்.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, கள்ளக்குறிச்சி நோக்கி அரசுப் பேருந்து திங்கள்கிழமை பிற்பகலில் புறப்பட்டது. பேருந்தை சங்கராபுரம் வட்டம், கடுவனூரைச் சோ்ந்த அ.அபிஷேக் (27) ஓட்டிச் சென்றாா்.
பேருந்து சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருநாவலூா் அருகிலுள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, ஓட்டுநா் அபிஷேக் முன்னே சென்ற வாகனத்தை முந்த முயற்சித்தாா், ஆனால் இடம் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக பேருந்தை இடதுபுறம் திருப்பிய போது முன்னே சென்ற லாரி மீது பேருந்து மோதியது. இதில் பேருந்தில் பயணித்த உளுந்தூா்பேட்டை மூலசமுத்திரம் ரா.மலா் (62), செ.ராஜலட்சுமி (40), ஷேக் உசேன் பேட்டையைச் சோ்ந்த ச.ஆயிஷா (60), ச.ஹஷீத் பாஷா (13), வேங்கைவாடியைச் சோ்ந்த வே.சலீனா (32), வே.கயல்விழி (10) ஆகிய 6 போ் காயமடைந்தனா்.
தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் காயமடைந்த 6 பேரையும் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

