நிலக்கடலையில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்
தருமபுரி மாவட்டத்தில் பரவலாக ஆடிப்பட்டத்தில் மானாவாரியில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் பரவலாக ஆடிப்பட்டத்தில் மானாவாரியில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற பாப்பிரெட்டிப்பட்டி வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குநர் ரா.அருணாகுமாரி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் பி.ரவி ஆகியோர் கூறும் வழிமுறைகள்:
நிலக்கடலை சாகுபடி செய்ய மணல்பாங்கான வண்டல் செம்மண், கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. சட்டிக் கலப்பையை பயன்படுத்தி உழுதபின் 3 அல்லது 4 முறை இரும்புக் கலப்பை அல்லது நாட்டுக் கலப்பையைக் கொண்டு கட்டிகள் நன்கு உடையும் வரை உழ வேண்டும்.
Advertisement
Advertisement
உளிக் கலப்பையைக் கொண்டு மண் கடின அடுக்கை உடைத்தல்: குறைந்த ஆழத்தில் மண் கடின அடுக்கு உடைய நிலத்தை உளிக் கலப்பையைக் கொண்டு 50 செ.மீ. இடைவெளியில் ஒரு திசையில் உழ வேண்டும். பின்னர், அதற்கு நேர் எதிர் திசையில் உழவேண்டும். இவ்வாறு 3 ஆண்டுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். பின்னர், தொழு உரம் அல்லது நன்கு மக்கிய தென்னை நார்க்கழிவு இட வேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: மண் பரிசோதனை அடிப்படையில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து இடவேண்டும். மண் பரிசோனை செய்யாவிட்டால் மானாவாரி நிலத்துக்கு 10:10:45 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து தரக்கூடிய ரசாயன உரங்கள் இடலாம். இறவைப் பகுதியில் 17:35:50 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து தரக் கூடிய உரங்களுடன் 60 கிலோ கந்தகக் கழிவை இடலாம்.
நுண்ணூட்டமிடுதல்:வேளாண் துறையினரால் பரிந்துரைக்கப்பட்ட நுண்ணூட்டச் சத்துக் கலைவை, 12.5 கிலோவுடன் உலர்ந்த மணலைப் பயன்படுத்தி 50 கிலோ வாக்கி விதை விதைத்தவுடன் மண் பரப்பில் தூவ வேண்டும். நுண்ணூட்டக் கலவையை மண்ணுடன் ஒன்றாக சேர்க்கக் கூடாது.
ஊட்டச்சத்து குறைபாடு: இலை நரம்புக்கு இணையாக லேசான மஞ்சள் நிறக்கோடுகள் இலையின் பரப்பில் தோன்றும், முதிர்ந்த நிலையில் பச்சைப் பற்றாக்குறை, நுனி மொட்டு வளர்வது தடைபடும். துத்தநாகம் குறைவாக உள்ள மண்ணுக்கு ஹெக்டருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட் இடவேண்டும்.
நரம்புகளுக்கிடையே பச்சையக் குறைவு, நுனி, வளர்ச்சி குறையும். இந்தக் குறைப்பாட்டை நீக்க 10 கிராம் பெர்ரஸ் சல்பேட் லிட்டர் தண்ணீரில் விதைத்த 30 மற்றும் 50-ஆவது நாள்களில் தெளிக்க வேண்டும்.
போரான் குறைபாடு: இளம் இலைகளில் வளர்ச்சி தடைப்பட்டு, குட்டையான புதர் அமைப்பைத் தரும். காய் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, விதையில்லாக் காய்களை தரும். போரான் குறைபாடுகளை 10 கிலோ போராக்ஸ், 200 கிலோ ஜிப்சம் விதைத்து 45-ஆவது நாளில் இட வேண்டும்.
கந்தகக் குறைபாடு குன்றிய வளர்ச்சி, ஒரே மாதிரி பச்சையக் குறைபாடுள்ள தாவரங்கள் சன்னமான தண்டு, வரை போன்ற அமைப்பு ஆகிவை கந்தகக் குறைபாட்டின் அறிகுறிகள் ஆகும்.
ஹெக்டருக்கு 120 கி.கி. விதை தேவைப்படும். செடிகளின் வரிசைகளுக்கிடையே 30 செ.மீ., செடிக்களுக்கிடையே 10 ச.மீ. இடைவெளி இருக்க வேண்டும். கடலையில் வளை தேமல் நோய் பரவியுள்ள இடங்களில் 15-க்கு 15 செ.மீ. இடைவெளியை கடைப்பிடிக்கவும்.
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியைக் கலக்கவும். இதை விதைக்கும் முன் செய்ய வேண்டும். இது உயர் உரங்களுடன் கலக்க ஏதுவானது. இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பூஞ்சாணக் கொல்லிகளுடன் கலக்கக் கூடாது. விதைகளை திரம் அல்லது மாங்கோசெப்புடன் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவிலோ அல்லது கார்பாக்சின், கார்பென்டாசிமுடன் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கலக்கவும். விதைகளை ரைசோபியம் உடன் கஞ்சி விதை நேர்த்தி செய்யப்படாவிட்டால், 2 கிராம் ரைசோபியத்துடன் 25 கிலோ எரு, 25 கிலோ மணலுடன் கலந்து விதைக்கவும்.
களை மேலாண்மை: விதைப்புக்கு முன்பு ஃப்ளுகுளோரலின் ஹெக்டருக்கு 2 லிட்டர் அளவில் மண்ணில் அளிக்கவும். களை முளைப்பதற்கு முன்பு ஃப்ளுகுளோரலின் ஹெக்டருக்கு 2 லிட்டரை 900 மி.லி. தண்ணீரில் கலந்து தட்டை விசிறி முன் குழாய் மூலம் அளிக்கவும். தொடர்ந்து நீர்ப் பாய்ச்ச வேண்டும். 35 முதல் 40 நாள்களுக்குப் பிறகு கைகளை எடுக்க வேண்டும். களைக்கொல்லி உபயோகிக்கவில்லை எனில் 20, 40-ஆம் நாளில் இரண்டு கைக்களை, மண்வெட்டி கொண்டு களை எடுக்க வேண்டும்.
மண் அணைத்தல்: 20, 40-ஆம் நாளில் இரண்டு கைக்களை களை எடுக்க வேண்டும். இரண்டாவது கைக்களை எடுத்த பின்பு மண் அணைக்க வேண்டும்.
ஜிப்சம் இடுதல்: ஒரு ஹெக்டருக்கு 400 கிலோ வீதம் 40-45 ஆவது நாளில் பாசனப் பயிருக்கும், 40-75-ஆவது நாளில் மானாவாரிப் பயிருக்கும செடிகளின் ஓரமாக மண்ணின் ஈரத்தன்மையைப் பொருத்து இடவேண்டும். மண்ணை கொத்தி ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். கால்சியம், கந்தகக் குறைபாடுள்ள நிலங்களில் இடுதல் நல்ல பலனைத்தரும்.
ஜிப்சம் இடுதலின் நன்மைகள்: காய் பிடிப்பை அதிகிரிக்கிறது. மணிகள் திரட்சியாக உருவாகிறது. ஜிப்சத்தின் மொத்த அளவில் பாதியை ரசாயன உரங்களுடன் அடி உரமாக மானாவாரி, இறவைப் பயிரில் நூல் புழுக்களால் ஏற்படும் காலஹஸ்தி மெலடி, நிலக்கடலையில் உண்டாகும் சொரி போன்ற பாதிப்புகளை குறைக்க முடியும்.
ஊட்டச்சத்து கலவைத் தெளிப்பு: பெரிய பருப்புகள் கொண்ட ரகங்களில் காய்களில் பருப்பின் வளர்ச்சி குறைபாடு என்பது ஒரு பெரிய இடர்பாடு ஆகும். இதைத் தவிர்த்து நல்ல வளர்ச்சியடைந்த முழுமையான பருப்புகளைப் பெறுவதற்கு பல ஊட்டச்சத்துக்களை கலந்து தெளிக்க வேண்டும். இந்தக் கலவையை தயாரிக்க டி.ஏ.பி 205 கிலோ, அம்மோனியம் சல்பேட் ஒரு கிலோ, போராக்ஸ் 0.5 கிலோ 37 லிட்டர் தண்ணீரில் ஒன்றாகக் கலந்து ஒரு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். மறு நாள் காலை இந்தக் கலவையை வடிகட்டினால் 32 லிட்டர் வரை தெளிந்த ஊட்டச்சத்து நீர் கிடைக்கும். இதை 468 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து 500 லிட்டர் அளவில் சுமார் 25, 35 நாள்களில் தெளிக்க வேண்டும்.
இந்த வழிமுறைகளில் பின்பற்றினால் நிலக்கடலையில் அதிக அளவு மகசூல் பெற்று விவசாயிகள் கூடுதல் வருவாய் பெறலாம்.