கர்நாடகத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் விவசாயிகளின் கடன் தள்ளுபடியை முதல்வர் குமாரசாமி அறிவிக்க வேண்டும். தவறினால் பாஜக போராட்டத்தில் ஈடுபடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரில் எடியூரப்பா திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: -
சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, முதல்வராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யப்படும் என குமாரசாமி தெரிவித்தார். ஆனால் அவர் முதல்வராக பதவி ஏற்று 1 மாதம் ஆக உள்ள நிலையில், அவர் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை.
காங்கிரஸுடன் மஜத கூட்டணி அமைக்கும்போதே, விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வது குறித்து நிபந்தனை விதித்திருக்க வேண்டும். கூட்டணி ஆட்சிக்கு பிறகு முன்னாள் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் ஆகியோர் பட்ஜெட் குறித்து எதிரெதிரான அறிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வது குறித்து முதல்வர் குமாரசாமி அறிவிக்க வேண்டும்.
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதற்கு தேவையான 50 சதவீத நிதியை மத்திய அரசு தர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மத்திய அரசின் எந்தவிதமான நிதி உதவியின்றி மாநில அரசுகளே விவசாயக் கடனை தள்ளுபடி செய்துள்ளன. அதனை பின்பற்றி கர்நாடக அரசும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மாறாக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாமல் காலம் கடத்தினால், அதனை கண்டித்து பாஜக தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்றார் அவர்.