கோலார் தங்கவயலில் சிறு, குறுந்தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும்: அமைச்சர் கே.ஜே.ஜார்ஜிடம் எம்எல்ஏ ரூபகலா வலியுறுத்தல்
கோலார்தங்கவயலில் சிறு,குறுந்தொழிற்சாலைகளை அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று
கோலார்தங்கவயலில் சிறு,குறுந்தொழிற்சாலைகளை அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜிடம் கோலார்தங்கவயல் தொகுதி எம்எல்ஏ ரூபகலா கோரிக்கை மனு அளித்துள்ளார்.
கோலார் மாவட்ட வளர்ச்சிப் பணி ஆய்வுக் கூட்டம் கோலார் நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தொழில்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான கே.எச்.முனியப்பா, கோலார்தங்கவயல் தொகுதி எம்எல்ஏ ரூபகலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது கோலார்தங்கவயல் மேம்பாட்டுக்கான நலத் திட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜிடம் எம்எல்ஏ ரூபகலா வழங்கினார்.
மனுவில் கூறியிருப்பதாவது:-
கோலார்தங்கவயலின் வாழ்வாதாரமாக உள்ள சுவர்ணா ரயிலை மாற்றாமல் தொடர்ந்து இயக்க வேண்டும். கோலார்தங்கவயலில் உள்ள நிலங்களில் சிறு,குறுந்தொழிற்சாலைகளை அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
தங்கச் சுரங்க தொழிலாளர் குடும்பங்கள் வசிக்கும் சுரங்க நிறுவன வீடுகளை அவர்களுக்கே சொந்தமாக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தக் கோரிக்கைகளை உடனடியாக நடவடிக்கைகளை எடுப்பதாக அமைச்சர் ஜார்ஜ் உறுதி அளித்ததாக எம்எல்ஏ ரூபகலா தெரிவித்தார்.