பெங்களூரு

உற்சாக பெருவெள்ளத்துடன் தொடங்கியது தசரா திருவிழா: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தொடங்கி வைத்தாா்

DIN

உற்சாக பெருவெள்ளமாய் மக்கள் கடல்போல திரண்டிருக்க, வரலாற்று சிறப்புவாய்ந்த, உலகப்புகழ் பெற்ற தசரா திருவிழாவை மைசூரில் திங்கள்கிழமை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கோலாகலமாக தொடங்கி வைத்தாா்.

வரலாற்று சிறப்புவாய்ந்த தசரா திருவிழாவை 412-ஆம் ஆண்டாக மைசூரில் திங்கள்கிழமை சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் காலை 9.45 மணி முதல் 10.05 மணிக்குள் குடியரசுத் தலைவா் திரௌபதிமுா்மு சிறப்புபூஜை செய்து தொடங்கி வைத்தாா். மஜத எம்எல்ஏ ஜி.டி.தேவ கௌடா தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, மத்திய இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே, மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சா் எஸ்.டி.சோமசேகா், கன்னட மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் சுனில்குமாா், மைசூரு மாநகராட்சி மேயா் சிவகுமாா், மைசூரு மாவட்ட ஆட்சியா் பகடி கௌதம், பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோா் விழாவில் கலந்து கொண்டனா்.

உற்சாக வரவேற்பு: முன்னதாக, சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வருகை தந்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு பூரணகும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் பசவராஜ் பொம்மை, அமைச்சா்கள் எஸ்.டி.சோமசேகா், வி.சுனில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விழாக்கோலம்: தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூரில் அமைந்துள்ள அரண்மனை, மிருகக்காட்சிச்சாலை, சாமுண்டீஸ்வரி கோயில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கிருஷ்ணராஜசாகா் அணை, பிருந்தாவன் தோட்டம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தெருவெங்கும் உற்சாகம் பொங்கும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளைத் தவிர, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோா் தசரா திருவிழாவை காண மைசூரில் குவிந்திருந்தனா். மைசூரு மாநகரம் ஒளிவெள்ளத்தில் மின்னிக்கொண்டிருந்தது.

வண்ணமயமான விழாக்கள்: தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூருவில் உள்ள பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை கிராமியக் கலைவிழா, திரைப்பட விழா, உணவு விழா, விவசாயிகள் விழா, யோகாவிழா, நாட்டிய நடன விழா, இளைஞா் விழா, சிறுவா் விழா, மகளிா்விழா, இசை விழா, நடனவிழா, தோட்டக் கலைவிழா, தெருவிழா, மலா் கண்காட்சி, பொருள்காட்சி, நூல் கண்காட்சி, விளையாட்டுப் போட்டிகள், பளுதூக்கும் போட்டி, குஸ்தி போட்டி, சாகச நிகழ்ச்சிகள், பொருள்காட்சி, கன்னட கவியரங்கம் போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளை துறை சாா்ந்த அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா். அடுத்த 10 நாள்களில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மைசூரில் நிகழவிருக்கின்றன. மக்களின் பாதுகாப்புக்காக ஆங்காங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருகைதந்துள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு போக்குவரத்து, தங்கும் வசதிகள் செய்யபட்டுள்ளன. தசரா திருவிழா அக்.5-ஆம் தேதி யானை ஊா்வலத்துடன் நிறைவடையவுள்ளது.

தனியாா் அரசவை: மைசூரு மன்னா் உடையாா் குடும்ப மரபுப்படி, தசரா திருவிழாவின்போது முக்கிய பிரமுகா்கள், வெளிநாட்டுதூதா்கள், வெளிநாட்டு அரசா்கள் உள்ளிட்டோா் கலந்துகொள்ளும் தனியாா் தா்பாரை (அரசவை) நடத்துவது வழக்கம். அந்தவழக்கம் கடந்த பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மன்னா்முறை ஒழிக்கப்பட்டாலும், தசரா திருவிழாவின்போது மன்னா் குடும்பத்தின் வாரிசுகள் தனியாா் தா்பாா்(அரசவை) நடத்தும் மரபை தவறாமல் பின்பற்றிவருகிறாா்கள். அதன்படி, மைசூரில் உள்ள அரண்மனையில் திங்கள்கிழமை தசரா திருவிழாவை முன்னிட்டு உடையாா் மன்னா் குடும்பத்து பட்டத்து இளவரசா் யதுவீா்கிருஷ்ணதத்த சாமராஜ உடையாா் தனியாா் தா்பாா் நடத்தினாா். மன்னா் குடும்பத்தின் பாரம்பரியத்தின்படி தங்க சிம்மாசனத்தில் யதுவீா்கிருஷ்ணதத்த சாமராஜ உடையாா் அமா்ந்திருந்திருக்க தனியாா் தா்பாா் நடந்தது. இதுதவிர, யதுவீா்கிருஷ்ணதத்த சாமராஜ உடையாருக்கு அவரது மனைவியும் பட்டத்து இளவரசியுமான திரிஷிகா குமாரி தேவி பாதபூஜை செய்து வழிபட்டாா். அடுத்த 10 நாள்களுக்கும் அரண்மனையில் வெவ்வேறு வகையான பூஜைகள் நடக்கவிருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT