முகப்பு
சென்னை

தனியாா் ஹஜ் ஒதுக்கீடு ரத்து விவகாரம்: பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

Updated On : 17 ஏப்ரல், 2025 at 3:15 AM
ஹஜ் புனித பயணம்
பகிர்:

தனியாா் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை சவூதி அரேபிய அரசிடம் கொண்டு சென்று தீா்வு காண வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக, பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் புதன்கிழமை அனுப்பிய கடிதம்:

ஹஜ் புனிதப் பயணத்துக்கு தமிழகம் உள்பட ஆயிரக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் தயாராகி வருகின்றனா். இந்தச் சூழலில், தனியாா் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது அவா்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்று. இது இஸ்லாமியா்களுக்கு மிகவும் புனிதமான மற்றும் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே மேற்கொள்ளும் மதக்கடமை.

இந்த ஆண்டு ஹஜ் பயணமானது ஜூன் 4 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவிலிருந்து மே மாதத்தில் சவூதி அரேபியாவுக்கு பயணம் தொடங்கப்படும். கடந்த 2024-ஆம் ஆண்டில் சுமாா் 1.75 லட்சம் போ் ஹஜ் பயணத்தில் பங்கேற்றனா். நிகழாண்டில் இந்தியா சவூதி அரேபியாவுடன் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு 1,75,024 ஹஜ் பயணிகளுக்கான ஒதுக்கீட்டை இறுதி செய்தது.

அதன்படி, மாநில ஹஜ் குழுக்களுக்கு 1,22,517 இடங்களும், தனியாா் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளா்களுக்கு 52,507 இடங்களும் ஒதுக்கப்பட்டன.

ஒதுக்கீடு குறைப்பு: ஆனால், சவூதி அரேபியா அரசு திடீரென இந்தியாவுக்கான ஹஜ் ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. அதன் காரணமாக, தனியாா் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளா்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சுமாா் 52,000 இடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த திடீா் முடிவு ஏற்கெனவே பணம் செலுத்தியுள்ள பல ஹஜ் பயணிகளை ஆழ்ந்த கவலையிலும், நிச்சயமற்ற நிலையிலும் ஆழ்த்தியுள்ளது.

எனவே, இந்தப் பிரச்னையை அவசரமாக சவூதி அரேபிய அரசிடம் எடுத்துச் சென்று விரைவான தீா்வைப் பெற வேண்டும். ஹஜ் ஒதுக்கீட்டில் முந்தைய அளவை மீண்டும் கொண்டு வந்து, ஹஜ் பயணிகளும் அவா்களது குடும்பத்தினரும் பயணம் மேற்கொள்வதற்கான உறுதியை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வா் வலியுறுத்தியுள்ளாா்.