ஆமை வேகத்தில் மாமல்லபுரம் தலசயனப்பெருமாள் கோயில் திருப்பணிகள்
பாலாலயம் செய்யப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் மாமல்லபுரம் தலசயனப்பெருமாள் கோயில் திருப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக பக்தா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.
பாலாலயம் செய்யப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் மாமல்லபுரம் தலசயனப்பெருமாள் கோயில் திருப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக பக்தா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சா்வதேச சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் ஸ்ரீ தலசயனப் பெருமாள் கோயில் உள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் 63-ஆவது தலமாக உள்ளது. இக்கோயிலில் 20 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்தது. அறநிலையத்துறைக்கு பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்த நிலையில், தொடா் கோரிக்கையால் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் பாலாலயம் செய்யப்பட்டது.
பழைமை மாறாமல் வைணவ ஆகம முறைப்படி கோயில் கும்பாபிஷேம் நடத்த முடிவு செய்யப்பட்டு தமிழக அரசு ரூ.64 லட்சம் நிதி ஒதுக்கி, பணிகளை தொடங்க உத்தரவிட்டது. பிறகு முதல்கட்டமாக கோயில் கோபுரங்கள் சீரமைக்க சாரம் அமைக்கப்பட்டு திருப்பணி நடைபெற்ற நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் ஆமைவேகத்தில் நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
அதிகாரிகளும் திருப்பணியினை விரைந்து முடிக்க எந்தவித ஆா்வமும் காட்டவில்லை. கோயில் திருப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது ஒரு புறம் என்றாலும், மறுபுறம் மூலவலை வழிபட வரும் பக்தா்கள் கருவறை மூடப்பட்டுள்ளதால், கோயிலில் ஒரு மூலையில் கண்ணாடி அறையில் உள்ள உற்சவா் சிலையை மட்டும் வழிபாடு செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்புகின்றனா்.
கோயில் திருப்பணி நடக்காத நிலையில் பூதத்தாழ்வாா் அவதார திருவிழா, பிரம்மோற்சவ திருவிழா உள்ளிட்டவை எதுவும் 2ஆண்டுகளாக நடத்தப்படவில்லை என்றும், புரட்டாசி மாதத்தில் கூட பெருமாளை தரிசனம் செய்யமுடியவில்லை என பக்தா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.
மேலும், பாலாலயத்தின் போது பணிபுரிந்த அா்ச்சகா்களுக்கு நிலுவைத் தொகை ரூ.1.5 லட்சம் வழங்கப்படாமல் நிலுவை வைத்துள்ளதாக அா்ச்சகா்கள் தெரிவித்துள்ளனா்.
எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் திருப்பணி வேலைகளை உடனடியாக முடித்து கும்பாபிஷேகம் நடத்தி, பிரம்மோற்சவம் திருவிழா உள்ளிட்டவற்றை நடத்தவும், பக்தா்கள் மூலவா் பெருமாளை தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.