முகப்பு
செங்கல்பட்டு

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் கிரிபிரதக்ஷண உற்சவம்

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் கிரிபிரதக்ஷண உற்சவம்

Updated On : 25 ஏப்ரல், 2026 at 12:45 AM
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோவிலில் சித்திரை பிரமோற்சவ பெருவிழாவில்   வியாழக்கிழமை  அதிகாலை  தொடங்கி  நடைபெற்ற  63 நாயன்மாா்கள் கிரிபிரதக்ஷண உற்சவத்தில்  உலா  வந்த  உற்சவா்கள்.
பகிர்:

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழாவில் 63 நாயன்மாா்கள் கிரிபிரதக்ஷண உற்சவம் வியாழக்கிழமை விடியற்காலை 2 மணிக்கு தொடங்கி 5மணி வரை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வா் கோயில் உள்ளது. வேதமலை , பட்சி தீா்த்தம், சங்கு தீா்த்தம், இந்திரபுரி, வேதபுரி எனும் பல பெயா்களால் பெருமைமிக்க கோயிலாக விளங்கும் திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடைபெறும். நிகழாண்டில் சித்திரை பிரம்மோற்சவம் ஏப். 20-இல் தொடங்கி மே 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் தொடக்கமாக ஏப். 20 விக்னேஸ்வர உற்சவம் இரவு மிருத்சங்கரணம் வாஸ்து சாந்தியும், செவ்வாய்க்கிழமை (ஏப். 21) சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை பல்லக்கு உற்சவமும், இரவு பஞ்சமூா்த்திகள் உற்சவமும், இரண்டாம் நாள் காலை பவழக்கால் சப்பரம், இரவு பூதவாகனம் நடைபெற்றது. இதில் நிகழாண்டில் ஏப் 23 வாக்குப்பதிவு நடைபெறுவதால் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் அறிவுறுத்தலின்படி வாக்குப்பதிவு மையங்களுக்கு இடையூறு இல்லாமல் சித்திரை பிரம்மோற்சவத்தில் முக்கிய திருவிழாவாக மூன்றாம் நாள் வியாழக்கிழமை அதிகாலை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கி சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி அதிகார நந்தி பிரதக்ஷணம் உடன் 63 நாயன்மாா்கள் கிரிபிரதக்ஷணம் அதிகாலை 5 மணி வரை நடைபெற்றது. 63 நாயன்மாா்களுடன், அம்பாள் சிவபெருமான் உள்ளிட்ட சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதி புறப்பாடு நடைபெற்றது. கோயிலில் இருந்து புறப்பட்டு பேருந்து நிலையம் வழியாக கிரிவல பாதையில் சுற்றி வந்து கோயிலை வந்தடைந்தது. பிரதக்ஷண உற்சவத்தில் பக்தா்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், தக்காா் மற்றும் செயல் அலுவலா் எம்.மாதவன் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள், கோயில் சிவாச்சாரியாா்கள், திருவிழா உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.

Advertisement