முகப்பு
சென்னை

உயர்நீதிமன்றத்தில் நடந்த மோதல் சம்பவம்: வழக்குரைஞர்களுக்கு சம்மன்

கடந்த 2009-ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக 31 வழக்குரைஞர்கள்  இம்மாதம்  28 ஆம் தேதி ஆஜராக வேண்டுமென எழும்பூர்  நீதி மன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. 

Updated On : 26 பிப்ரவரி 2019, 4:13 am IST
பகிர்:


கடந்த 2009-ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக 31 வழக்குரைஞர்கள்  இம்மாதம்  28 ஆம் தேதி ஆஜராக வேண்டுமென எழும்பூர்  நீதி மன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. 
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு போலீஸார் மற்றும் வழக்குரைஞர்களுக்கு இடையே  ஏற்பட்ட  மோதல்  சம்பவத்தின் போது போலீஸார் நடத்திய தடியடி தாக்குதலில் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள்  காயமடைந்தனர். வழக்குரைஞர்களின் கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தாக்கப்பட்டன. தமிழக போலீஸார் விசாரித்து வந்த இந்த மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. 
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த சிபிஐ அப்போதைய வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் கருப்பன் உள்ளிட்ட 32 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பான இடைக்கால குற்றப்பத்திரிக்கையை எழும்பூர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.  இதை எதிர்த்து வழக்குரைஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றம், இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க தடை விதித்து உத்தரவிட்டது. கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 32 பேரில் வழக்குரைஞர் கருப்பன் இறந்து விட்டதால், அவரை விடுத்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலை ஜி.மோகனகிருஷ்ணன் உள்ளிட்ட 31 பேரும் இம்மாதம் 28ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. 
இதனிடையே, எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி வழக்குரைஞர் மகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், போலீஸாரின் அத்துமீறலை மறைக்கும் வகையில் வழக்குரைஞர்களுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களைக் கூறி சிபிஐ இடைக்கால குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட போலீஸாருக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே இடைக்கால குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய வேண்டும்.மேலும் வழக்கை நியாயமான முறையில் விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும். எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார்.  விரைவில் இம் மனு விசாரணைக்கு வரவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.