உங்களுக்கு ஏன் கொந்தளிப்பு வருகிறது: திமுக எம்எல்ஏ-க்கு அமைச்சர் ரமேஷ் கேள்வி
திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர் மீதான நடவடிக்கை விவகாரம் தொடர்பாகக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என அமைச்சர் ரமேஷ் உறுதி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அர்ச்சகர் மீதான நடவடிக்கை விவகாரம் தொடர்பாகக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் உறுதியளித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அர்ச்சகர் மீதான நடவடிக்கைக்கு திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அனிதா கிருஷ்ணனுக்கு பதிலளித்து அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "மக்களைச் சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி, மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கத்தான் மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
பக்தர்களிடம் சட்டத்துக்குப் புறம்பாகப் பணம் பெற்றுத்தான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விரைவான தரிசனத்துக்கு பணம் வசூலிப்பதாகக் கூறி, பணி செய்யத் தடை விதித்து அர்ச்சகர் மீது அமைச்சர் ரமேஷ் நடவடிக்கை எடுத்தார்.