திருச்செந்தூர் கோயில் முறைகேடு: பாரபட்சமின்றி நடவடிக்கை! - அமைச்சர் ரமேஷ்
திருச்செந்தூர் கோயில் முறைகேடு குறித்து அமைச்சர் ரமேஷ் பேட்டி...
திருச்செந்தூர் கோயிலில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்வோம் என்று தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று காலை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முகக்கவசம் அணிந்து பக்தரைப் போன்று சென்ற அமைச்சரிடம், விரைவான தரிசனத்துக்கு ரூ. 4,000 லஞ்சமாக பெற்ற அர்ச்சகர்கள் கையும் களவுமாக மாட்டிக் கொண்டனர்.
தொடர்ந்து, கோயில் அலுவலகத்தில் ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
Advertisement
Advertisement
அவர் பேசியதாவது:
“திருச்செந்தூர் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் புகார்கள் எழுப்பி வந்தனர். இதன்காரணமாக இன்று காலை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமல் ஆய்வுக்கு வருகை தந்தேன்.
கோயிலில் சிறப்பு தரிசனம் செய்ய பக்தர்களிடம் பணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அர்ச்சகர்கள் மட்டுமின்றி அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் சேர்ந்துதான் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
பக்தர்களிடம் பணம் வாங்கியது தொடர்பாக அர்ச்சகர்கள், அதிகாரிகளிடம் மன்னிப்புக் கடிதம் பெறவில்லை. விளக்கக் கடிதம்தான் பெற்றுள்ளேன். கோயில் சொத்துகள், வருமானம் தொடர்பாக ஆய்வு செய்துள்ளேன்.
மேலும், அன்னதானக் கூடம், அடிப்படை வசதிகள், விரிவான தரிசனம் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. இன்று முழுவதும் கோயிலில் ஆய்வு செய்யவுள்ளேன்.
ஆய்வின் முடிவில் முழு அறிக்கை வழங்குவேன். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி, தயக்கமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.