வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் மயக்கம்?
திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் மயக்கமடைந்ததாகக் கூறப்படுவது பற்றி...
திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி பக்தர்கள் சிலர் மயக்கமடைந்துள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று(சனிக்கிழமை) கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் பலரும் பால்குடம் எடுத்தும் காவடி எடுத்தும் பல மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோயிலில் பக்தர்கள் சிலர் மயங்கி விழுநதுள்ளனர்.
Advertisement
Advertisement
வழக்கமாக சாலையில் இருந்து 50 அடி தூரத்திலேயே கோயிலுக்குள் செல்ல முடியும். ஆனால் பால்குடம் எடுப்பவர்கள், மற்ற பக்தர்கள் என தனித்தனி வழியாகப் பிரித்து அனுப்பியதால் பக்தர்கள் சுமார் 150 மீட்டர் தூரம் நடந்து வர வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆங்காங்கே தடுப்புகள் வைத்திருந்ததாலும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காலை முதல் விரதம் இருந்ததால் வெய்யில் அதிகமாக இருந்ததாலும் ஒரு சிலர் மயங்கி விழுந்த நிலையில் அங்குள்ள மருத்துவ உதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அங்கு வந்த பக்தர்கள் 140க்கும் மேற்பட்டோர் மருத்துவ மையத்தை நாடி உதவி பெற்றுச் சென்றுள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோயிலில் ஒருவர் மட்டுமே மயக்கமடைந்ததாகக் கூறியுள்ளனர்.
"இத்திருக்கோயிலில் 30.06.2026 ந்தேதி அன்று வைகாசி விசாக வசந்த உற்சவ பால்குடத் திருவிழாவினை முன்னிட்டு, அதிகாலை 04.30 மணிக்கு இத்திருக்கோயில் நடை திறக்கப்பட்டது முதல் அருள்மிகு சண்முகர் அபிஷேகத்திற்கு பக்தர்களால் கொண்டு வரப்படும் பால்குடங்கள் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விசாககுறடில் அபிஷேகம் செய்யப்படுவது தொன்றுதொட்டு வழக்கத்தில் இருந்து வரும் நிகழ்வு ஆகும். அதன்படி, 30.06.2026 ந்தேதி அன்று அதிகாலை 4.30 மணிக்கு இத்திருக்கோயில் நடை திறக்கப்பட்டது முதல் பக்தர்களால் கொண்டுவரப்பட்ட பால்குடங்கள் அருள்மிகு சண்முகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வந்தது என்ற விபரம் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மதுரை, விளாங்குடி, திரு.பார்த்தசாரதி, த/பெ. ஸ்ரீராமுலு, வயது 63 - என்பவர் திருக்கோயிலுக்கு பால்குடம் எடுத்து கம்பத்தடி மண்டப பகுதியில், அன்னார் கொண்டுவந்த பால்குடத்தினை அருள்மிகு சண்முகருக்கு அபிஷேகம் செய்துவிட்டு, வெளியே செல்லும் வழியில் அன்னதான கூடத்திற்கும் திருக்கோயில் திருமண மண்டபத்திற்கும் நடுவே உள்ள பகுதியில் மயக்கமடைந்த நிலையில் திருக்கோயிலுக்கு சொந்தமான வள்ளிதேவசேனா மண்டபத்தில் திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ முகாமில் உள்ள குழுவினர் அன்னாரை பரிசோதனை செய்ததில், அன்னாருக்கு சர்க்கரையின் அளவு 456 இருந்தது என்றும், அன்னார் அதிகாலை முதல் உணவு அருந்தாமல் விரதமிருந்தார் என்றும், அதிக சர்க்கரைக்காக மாத்திரை எதுவும் இன்று எடுக்காததாலும், மயக்கமடைந்ததாகவும், அன்னாருக்கு உடனடியாக மருத்துவக்குழுவின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, நல்ல நிலையில் அன்னாரது வீட்டிற்கு உடனடியாக சென்றுவிட்டார் என்ற விபரம் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. (மருத்துவக்குழுவினரின் அறிக்கை நகல் இத்துடன் இணைக்கப்பட்டள்ளது).
மேலும், 87 நபர்கள் மயக்கமடைந்தனர் என்ற மீடியாவில் வரும் செய்தி பொய்யானது என்றும், ஒரு நபர் மட்டுமே அதிகஅளவில் சர்க்கரை அளவு (456) இருந்ததால் மயக்கமடைந்தார் என்றும், அவருக்கும் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வீட்டிற்கு சென்றுவிட்டார் என்ற விபரம் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் திருப்பரங்குன்றம் கோயிலில் உள்ள பக்தர் ஒருவர், அங்கு கூட்ட நெரிசல் இருப்பதாகவும் வயதானவர்கள், குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும் போதிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கூறிய விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.