சென்னை பெருநகர போக்குவரத்து காவல் தொடர்பான பொது மக்கள் குறைதீர் கூட்டம் இரு வேறு இடங்களில் சனிக்கிழமை (செப். 14) நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தலின்படியும், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஏ. அருண் வழிகாட்டுதலின்படியும் சனிக்கிழமை காலை 11 மணிக்கு இரு இடங்களில் குறைதீர்க் கூட்டம் நடத்தப்படுகிறது.
அம்பத்தூர், புளியந்தோப்பு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளை அடக்கிய போக்குவரத்து காவல் மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட மக்களுக்கான குறைதீர்க் கூட்டம், திருமங்கலம், 100 அடி சாலையில் அமைந்துள்ள எஸ்.எஸ். மஹாலில் நடைபெறும். மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகளை அடக்கிய கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட மக்களுக்கான குறைதீர்க் கூட்டம் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. போக்குவரத்து காவல் துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களின் புகார்களைப் பெற உள்ளனர்.