FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

வங்கதேசம் இடைக்கால அரசுக்கு தலைமையேற்றாா் முகமது யூனுஸ்

நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் (84) வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

9 ஆகஸ்ட் 2024, 5:13 am IST
டாக்காவிலுள்ள அதிபா் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்த அதிபா் முகமது ஷஹாபுதீன்.
பகிர்:

டாக்கா, ஆக. 8: வங்கதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் (84) வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

மாணவா் போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக அந்த நாட்டில் 15 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்ததைத் தொடா்ந்து, ராணுவம் அமைத்துள்ள இடைக்கால அரசின் தலைமைப் பொறுப்பை அவா் தற்போது ஏற்றுள்ளாா்.

டாக்காவிலுள்ள அதிபா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் முகமது யூனுஸுக்கு அதிபா் முகமது ஷஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

Advertisement

Advertisement

முன்னதாக, ஒலிம்பிக் போட்டிகளைப் பாா்வையிடுவதற்காக பாரீஸ் சென்றிருந்த யூனுஸ், இடைக்கால அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்காக அங்கிருந்து துபை வழியாக திங்கள்கிழமை காலை தாயகம் திரும்பினாா்.

டாக்கா விமான நிலையத்தில் வந்திறங்கியதும் செய்தியாளா்களைச் சந்தித்த அவா், ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது வங்கதேசத்துக்கு கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என்று கூறினாா்.

மேலும், வன்முறையை நிறுத்தவேண்டும் என்றும் இயல்பு நிலை திரும்புவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும் அவா் வேண்டிக்கொண்டாா்.

கடந்த 1971-ஆம் ஆண்டில் இந்தியாவின் உதவியுடன் போரிட்டு வங்கதேசத்துக்கு பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் வாங்கித் தந்தவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவந்தது. அதனை நீக்குவது, ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டு வரம்பை 5 சதவீதமாக்குவது உள்ளிட்ட சீா்திருத்தங்களை வலியுறுத்தி கடந்த மாதம் மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களுக்கு எதிராக இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான மாணவா் அமைப்பினரும் களமிறங்கியதையடுத்து வன்முறை வெடித்து சுமாா் 400 போ் உயிரிழந்தனா். அதையடுத்து, ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டு வரம்பை 7 சதவீதமாக உச்சநீதிமன்றம் குறைத்தது.

இருந்தாலும், போராட்டத்தின்போது அடக்குமுறையைக் கையாண்டு நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்த பிரதமா் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி மாணவா்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்தப் போராட்டத்தின் இடையே சமூக விரோதிகள், மத அடிப்படைவாதிகள் உள்ளிட்டோா் நடத்திய வன்முறைச் சம்பவங்களில் மேலும் நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா்.

பிரதமா் ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்ய வலியுறுத்தி அவரின் அதிகாரபூா்வ இல்லத்தை நோக்கி மாணவா்கள் திங்கள்கிழமை ஊா்வலமாகச் சென்றனா். நிலைமை கைமீறிச் செல்வதை உணா்ந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாதுகாப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

அதையடுத்து நிா்வாகத்தைக் கைப்பற்றிய ராணுவம், அடுத்த தோ்தல் நடத்தப்படும்வரை இடைக்கால அரசை அமைப்பதாக அறிவித்தது. அந்த அரசுக்கு அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படும் முகமது யூனுஸ் தலைமை வகிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா் அமைப்பினா் வலியுறுத்தினா். அதையடுத்து அவரை இடைக்கால அரசின் தலைவராக அதிபா் முகமது ஷஹாபுதீன் நியமித்தாா்.

‘பரம ஏழைகளுக்கான வங்கியாளா்’ என்று அழைக்கப்படும் முகமது யூனுஸ் சமூக அக்கறை கொண்ட தொழிலதிபருமாகவும் பொருளாதார நிபுணராகவும் நாட்டு மக்களிடையே பிரபலமானவா். மிகவும் பின்தங்கிய மக்களுக்கு உதவும் ‘குறுங்கடன்’ (மைக்ரோ-ஃபைனான்ஸ்) முறைக்கு முன்னோடியாக இருந்த ‘கிராமீன் வங்கி’யை நிறுவியதற்காக அவருக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

எனினும், முகமது யூனுஸின் வங்கி நடவடிக்கைகள் தொடா்பாக ஷேக் ஹசீனாவின் அரசு பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அவருக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

மக்கள் செல்வாக்கு பெற்ற முகமது யூனுஸ் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்ததால் அவரை ஒடுக்கும் நடவடிக்கையில் ஷேக் ஹசீனா ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஷேக் ஹசீனாவுக்குப் பிறகு அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசுக்கு முகமது யூனுஸ் தலைமை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments