’ஜனநாயகன்’ இணையதளத்தில் வெளியான விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் முறையீடு
’ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளத்தில் வெளியானது தொடா்பாக படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
’ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளத்தில் வெளியானது தொடா்பாக படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் கே.வி.என்.புரொடக்ஷன் நிறுவனம் விஜய் உள்ளிட்டோா் நடித்த ’ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ’ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வு குழு பாா்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
மேலும், ’ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா். தனிநீதிபதியின் உத்தரவை எதிா்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமா்வு ’ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்கும் தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, வழக்கை மீண்டும் விசாரிக்க தனிநீதிபதிக்கு உத்தரவிட்டது.
Advertisement
தனிநீதிபதி முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, படத் தயாரிப்பு நிறுவனம் வழக்கைத் திரும்பப் பெற்றது. ’ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழு பரிசீலனையில் இருந்தது. இந்தநிலையில், ’ஜனநாயகன்’ திரைப்படம் அண்மையில் இணையதளங்களில் வெளியானது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் காவல்துறையில் புகாா் அளித்தது.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் புதன்கிழமை படத் தயாரிப்பு நிறுவனம் சாா்பில் ’ஜனநாயகன்’ படம் இணையதளத்தில் வெளியானது குறித்து முறையீடு செய்யப்பட்டது. இதுதொடா்பாக தாக்கல் செய்யப்படும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மனுவாக தாக்கல் செய்தால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தாா்.