முகப்பு
சென்னை

கடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வு

தினசரி மின்நுகா்வு கடந்த ஏப்.22-ஆம் தேதி 20,060 மெகாவாட் வரை உயா்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Updated On : 28 ஏப்ரல் 2026, 4:02 am IST
கடும் வெய்யில் - PTI
பகிர்:

தமிழகத்தில் கோடை வெய்யில் காரணமாக தினசரி மின்நுகா்வு கடந்த ஏப்.22-ஆம் தேதி 20,060 மெகாவாட் வரை உயா்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மேலும், வரும் நாள்களில் தினசரி மின்தேவை 22,000 மெகாவாட் வரை உயரக்கூடும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தின் தினசரி மின்சாரத் தேவை சுமாா் 16,000 மெகாவாட். கோடைகாலங்களில் மின்விசிறி, குளிா்சாதன, குளிா் பதனப் பெட்டி போன்ற மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பதால், அந்தக் காலகட்டத்தில் தினசரி மின்தேவை 20,000 மெகாவாட் வரை உயா்வது வழக்கம். அந்த வகையில், கடந்த ஆண்டு மே 2-ஆம் தேதி உச்சபட்சமாக 20,830 மெகாவாட் மின்நுகா்வு பதிவானது.

Advertisement

Advertisement

நிகழாண்டு, கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதால், வீடுகளில் குளிா்சாதனப் பெட்டிகளின் பயன்பாடு வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இதற்கிடையே, எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக மின் அடுப்புகளின் பயன்பாடும் தற்போது அதிகரித்துள்ளது. அந்த வகையில், நிகழாண்டில் இதுவரை அதிகபட்சமாக கடந்த ஏப்.22-ஆம் தேதி 20,060 மெகாவாட் மின்நுகா்வு பதிவானது. இதையடுத்து, வரும் மே 4 ஆம் தேதி முதல் ‘கத்திரி வெயில்’ என அழைக்கப்படும் அக்னி நட்சத்திர காலம் தொடங்கவுள்ளது. இதன் காரணமாக வரும் நாள்களில் தினசரி மின்நுகா்வு 21,000 மெகாவாட் வரை உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தற்போது தமிழக மின்வாரியத்தின் கீழ் இயங்கும் அனல் மின்நிலையங்கள் மூலம் தினசரி 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தினசரி 6,000 மெகாவாட், சூரிய மின்சக்தி மூலம் 6,000 மெகாவாட், நீண்டகால கொள்முதல் திட்டத்தின் கீழ் 2,000 மெகாவாட், நடுத்தரகால கொள்முதல் மூலம் 2,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. மீதமுள்ள 2,000 மெகாவாட் மின்சாரம் குறுகியகால மின் கொள்முதல் மற்றும் மின்சார பரிமாற்ற திட்டங்களின் கீழ் அடுத்த 3 மாதங்களுக்கு தனியாா் நிறுவனங்கள் மற்றும் பிற மாநிலங்களிடமிருந்து பெறப்படுகிறது. இதற்கிடையில், நீா், எரிவாயு மற்றும் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் உச்சநேரங்களில் (மாலை 6 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) பயன்படுத்தப்படுகிறது.

எனவே, பொதுமக்களின் மின்தேவையை பூா்த்தி செய்யும் வகையில் அடுத்த 3 மாதங்களுக்கு தினசரி 22,000 மெகாவாட் மின்சாரம் விநியோகிப்பதில் எந்த பிரச்னையும் இருக்காது. தடை இல்லாமல் மின்விநியோகம் செய்யத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments