சுட்டெரித்த கத்திரி வெய்யில் இன்றுடன் நிறைவு! வெப்பம் குறைய வாய்ப்புள்ளதா?
கத்திரி வெய்யில் நிறைவடைந்தது பற்றி..
தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் வெப்பம் உக்கிரமாக இருக்கும் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெய்யில் காலம் வியாழக்கிழமை (மே 28) நிறைவடைகிறது.
கோடைக்காலத்தில் மிக முக்கியமான அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெய்யில் காலம் மே 4-ஆம் தேதி தொடங்கியது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் வெப்பநிலை உச்சம் தொட்டது. ஒரு சில நாள்களாக 110 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது.
நாடு முழுவதும் கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில், பகல் நேரங்களில் சாலைகளில் நடக்க முடியாத அளவுக்கு வெய்யில் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
Advertisement
Advertisement
சென்னை, மீனம்பாக்கத்தில் 107 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவானது. இந்த ஆண்டில் மிக அதிக வெப்பமான நாளாக அது மாறியது. வழக்கமாகக் கத்திரி வெய்யில் காலங்களில் 104 முதல் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு 107, ஒரு சில இடங்களில் 110 டிகிரியாக உயர்ந்தது. இதனால், மக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வந்தனர்.
கடல் காற்றானது தரைப்பகுதியைத் தொடுவதற்குத் தாமதம் ஆனதால் வறண்ட வானிலை ஏற்பட்டு, வெப்பநிலை கடுமையாக உயர்ந்தது. இதனால் இயல்பான அளவை விட வெப்பமானது 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகப் பதிவானது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரித்தது.
கடும் வெய்யிலின் தாக்கத்தால் வேலைக்காக வெளியில் செல்பவர்கள், முதியவர்கள், குழந்தைகள் கடும் உடல் உபாதைகளை அனுபவித்து வருகின்றனர். ஒரு சிலர் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்குநாள் சுட்டெரித்து வரும் வெப்பநிலையால் மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனிடையே தமிழகத்திலும், கேரளத்திலும் தென்மேற்குப் பருவமழை மே 26-ல் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜூன் 2 முதல் 4 வரை பவருமழை தொடங்க வாய்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வெய்யிலின் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளலாம். நீரேற்றம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம், கருப்பு ஆடைகளைத் தவிர்க்கலாம். வெய்யில் குறையும் வரை தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்கலாம். பருத்தி ஆடைகளை அணியலாம்.
கத்திரி வெய்யில் இன்றுடன் நிறைவடையும் நிலையில், இனிவரும் நாள்களிலாவது வெய்யிலின் தாக்கம் குறையுமான என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.