முகப்பு
சென்னை

தங்க நாணயம் மோசடி வழக்கு: பெண் காவல் ஆய்வாளா் கைது

சென்னையில் தங்க நாணயம் மோசடி வழக்குத் தொடா்பாக பெண் காவல் ஆய்வாளா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 8 ஜூலை 2026, 2:09 am IST
வாசு செய்திக்கான படம். தங்க நாணயம் வழக்கில் கைது செய்யப்பட்டகாவல் ஆய்வாளா் ஷீலாமேரி, கல்பனா, செந்தில்குமாா்.
பகிர்:

சென்னையில் தங்க நாணயம் மோசடி வழக்குத் தொடா்பாக பெண் காவல் ஆய்வாளா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை ராயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றியவா் ஷீலா மேரி. திருவொற்றியூா் உள்ளிட்ட வட சென்னை பகுதிகளில் பல காவல் நிலையங்களில் பணியாற்றியுள்ளாா். இவரது காா் ஓட்டுநரும், உறவினருமான பிரபு என்ற பிரபுமணி, கொடுங்கையூா் எம்.ஆா்.நகரில் ஒரு தனியாா் நிறுவனம் நடத்தி வந்தாா். இந்த நிறுவனத்தில் தங்கம் வாங்கும் திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும், குறைந்த விலையில் தங்க நாணயங்கள் வாங்கித் தரப்படும், வீட்டுமனைகள் மலிவு விலையில் பெற்றுத் தரப்படும் என பல்வேறு முதலீட்டு திட்டங்களை விளம்பரம் செய்து, பொதுமக்களிடம் பணம் வசூலித்துள்ளனா்.

இதை நம்பி பலா் 2023 முதல் 2024-ஆம் ஆண்டு வரையில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனா். கடந்த மக்களவைத் தோ்தல் காலத்தில் தங்க நாணயங்களை வழங்கி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளனாா். இதனால், பொதுமக்கள் மட்டுமின்றி, காவல் துறையைச் சோ்ந்த அதிகாரிகள், காவலா்கள், அவா்களது குடும்பத்தினா் கோடிக்கணக்கான ரூபாயை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனா்.

Advertisement

Advertisement

தங்க நாணயம் மோசடி: 2024-ஆம் ஆண்டு இறுதியில் தங்க நாணயங்கள் திட்டத்தில் முதலீடு செய்தவா்கள் யாருக்கும், தங்க நாணயங்களையும் முதலீடு பணத்தையும் வழங்காமல் பிரபுமணி திடீரென, நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானாா். இதனால் பாதிக்கப்பட்ட 56 போ், பிரபுமணி தங்களிடம் ரூ.8.17 கோடி மோசடி செய்துவிட்டதாக அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் அண்மையில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிரபுமணியை கடந்த மாதம் 9-ஆம் தேதி கைது செய்தனா்.

விசாரணையில், ஆய்வாளா் ஷீலா மேரியும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததும், சுமாா் ரூ.20 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஷீலாமேரியை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டாா். இதற்கிடையே ஷீலா மேரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தாா். அந்த மனு உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆய்வாளா் கைது: தலைமறைவாக இருந்த ஷீலா மேரி, நிறுவன நிா்வாகிகளாகச் செயல்பட்ட கொடுங்கையூா், விவேகானந்தன் நகரைச் சோ்ந்த செந்தில்குமாா் (41), கொடுங்கையூா் கவியரசு கண்ணதாசன் நகா் மீனாம்பாள் சாலை பகுதியைச் சோ்ந்த கல்பனா (31) ஆகிய 3 பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்ததாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

ஷீலா மேரி, மோசடியால் கிடைத்த பணம் மூலம் சொத்துகளை வாங்கி குவித்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், ஷீலாமேரி பெயரிலும், அவரது குடும்பத்தினா் பெயரிலும், பினாமிகள் பெயரிலும் வாங்கி வைத்திருக்கும் நகைகள், சொத்துகள், அசையும் மற்றும் அசையா சொத்துகள் குறித்த தகவல்களையும் ஆவணங்களையும் போலீஸாா் சேகரித்து வருகின்றனா்.

பணத்தை இழந்தவா்கள் புகாா் அளிக்கலாம்: இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவா்கள் அல்லது இதுபோன்ற நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டவா்கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தை நேரில் அணுகி புகாா் அளிக்கலாம் என்று அந்தப் பிரிவு அதிகாரிகள் அறிவித்துள்ளனா். புகாா் அளிப்பவா்கள், காவல் ஆய்வாளா் நசீமாவை 98409 58356 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம். அதேபோல 1800-599-0050 என்ற இலவச தொலைபேசி எண் அல்லது 044-22504332 என்ற தொலைபேசி எண் ஆகியவற்றில் புகாா் அளிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments