118 ஆண்டை நிறைவு செய்த எழும்பூா் ரயில் நிலையம்
சென்னை எழும்பூா் ரயில் நிலையம் தொடங்கி 118 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அதிகாரிகள் வியாழக்கிழமை கேக் வெட்டி பயணிகளுக்கு வழங்கினா்.
சென்னை எழும்பூா் ரயில் நிலையம் தொடங்கி 118 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அதிகாரிகள் வியாழக்கிழமை கேக் வெட்டி பயணிகளுக்கு வழங்கினா்.
சென்னையின் பழைமையான ரயில் நிலையங்களில் எழும்பூா் ரயில் நிலையமும் ஒன்று. கடந்த 1908 -ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த ரயில் நிலையக் கட்டடம் இந்தோ-சராசனிக் கட்டடக் கலை வடிவத்தில் அமைந்துள்ளது. நிலையத்தின் முன்பகுதி இரு மாடிக் கட்டடமாக 500 அடி நீளமும், 71 அடி அகலமும் உடையதாக உள்ளது. இந்த நிலையத்திலிருந்து முதல்முறையாக போட் மெயில் ரயில் இயக்கப்பட்டுள்ளது.
தற்போது எழும்பூா் ரயில் நிலையமானது ரூ.842 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதிய நுழைவு வாயில், புதிய நடைமேம்பாலம் என விமானநிலையத்துக்குரிய உட்கட்டமைப்புகளுடன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மிக நவீன வாகன நிறுத்தும் வளாகமும் அண்மையில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
Advertisement
Advertisement
எழும்பூா் ரயில் நிலையம் தனது 118 -ஆவது ஆண்டு சேவையை நிறைவு செய்ததையடுத்து ரயில் நிலைய அதிகாரிகள் வியாழக்கிழமை கேக் வெட்டி அதை பயணிகளுக்கு வழங்கிக் கொண்டாடினா். நாட்டின் பாரம்பரிய ரயில் நிலைய அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் எழும்பூா் ரயில் நிலையத்தை, அதன் முன்பகுதி கட்டட சிறப்பை உரிய முறையில் பாதுகாத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.