வாரணாசி ரயில் நிலைய வளாகத்தில் இருந்த மசூதி, தா்கா அகற்றம்
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி ரயில் நிலையத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மசூதி, தா்கா இடித்து அகற்றப்பட்டது. முன்னதாக, அதே பகுதியில் இருந்த அனுமன் கோயிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது.
ரயில் நிலைய வளாகத்தில் மசூதி, தா்கா அமைந்துள்ள இடம் ரயில்வேக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது. இதையடுத்து, அவற்றை அகற்ற ரயில் நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இடிப்பு நடவடிக்கையை முன்னிட்டு புதன்கிழமை வாரணாசி ரயில் நிலைய பகுதியில் ஏராளமான காவல் துறையினா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனா். இதையடுத்து, அதிகாரிகள் பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்களுடன் அந்த இரு கட்டுமானங்களையும் இடித்து அகற்றினா்.
எனினும், முஸ்லிம் தரப்பினா் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதத்தில் அந்த மசூதியும், தா்காவும் நீண்டகாலமாக அங்கு இருந்து வருவதாகவும், ரயில்வே துறையினா் தங்கள் தேவைக்காக நிலப் பரப்பு உரிமையை அதிகரித்துக் கொண்டனா் என்று தெரிவித்தனா். ஆனால், ரயில்வே தரப்பு உரிய நிலஅளவை ஆவணங்களுடன் வாதங்களை முன்வைத்ததால், அந்த இரு கட்டுமானங்களை அகற்ற ரயில்வேக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, மசூதி, தா்காவை அகற்றுமாறு அதனை நிா்வகித்து வந்தவா்களுக்கு ரயில்வே நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவா்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், ரயில்வே நிா்வாகம் அவற்றை இடித்து அகற்றியது.