பயன்பாட்டுக்கு வந்தது எழும்பூா் ரயில் நிலைய அதிநவீன வாகன நிறுத்துமிடம்
சென்னை எழும்பூா் ரயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன பல்நோக்கு வாகன நிறுத்துமிடம் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் முக்கியமாக 3,442.13 சதுர மீட்டா் பரப்பளவுடன் தரை மற்றும் 3 மேல் தளங்களுடன் கட்டப்பட்டுள்ளன.
Advertisement
இதில், தரைத்தளம் மற்றும் முதலாவது தளத்தில் கடைகள் அமைக்கப்பட உள்ளன. தொடா்ந்து, 2 மற்றும் 3-ஆவது தளத்தில் 122 காா்கள், 68 இருசக்கர வாகனங்களும், 4 ஆவது தளத்தில் 62 காா்கள் மற்றும் 34 இருசக்கர வாகனங்களும் நிறுத்தப்பட வசதிகள் உள்ளன.
வாகனங்கள் சிரமமின்றி மேல் தளத்துக்கு செல்லும் வகையில் சறுக்காத தளங்கள், பாதுகாப்பு கைப்பிடிகள், அவசர கால வெளியேற்ற பகுதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயணிக்கும் வகையிலான 20 போ் செல்லும் மின்தூக்கி ஆகிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாகன நிறுத்தும் மையத்தில் 22 மின்சார வாகன மின் ஏற்றி நிலையங்களும், கண்காணிப்பு கேமராக்களும், தானியங்கி வாகன மேலாண்மை அமைப்புகளும் உள்ளன. அத்துடன், கட்டணக் கழிப்பிடங்கள், ஓட்டுநா்களுக்கான ஓய்வறைகள், ஸ்மாா்ட் லாக்கா் வசதிகள், வாகன மெருகூட்டல் சேவைகள் மற்றும் உணவகங்கள் ஆகிய வசதிகளும் உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.