முகப்பு
சென்னை

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: உண்ணிகிருஷ்ணன் போற்றியிடம் எஸ்ஐடி 8 மணி நேரம் விசாரணை

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: உண்ணிகிருஷ்ணன் போற்றியிடம் எஸ்ஐடி 8 மணி நேரம் விசாரணை

Updated On : 28 ஜூன் 2026, 7:00 am IST
பகிர்:

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபரான உண்ணிகிருஷ்ணன் போற்றியிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) 8 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை மேற்கொண்டது.

இந்த வழக்கில் எஸ்ஐடி அடுத்தவாரம் இறுதிக்கட்ட அறிக்கை தாக்கல் செய்யவிருக்கும் நிலையில், மேற்கண்ட விசாரணை நடைபெற்றுள்ளது.

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்களில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், கேரள உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த ஆண்டு எஸ்ஐடி அமைக்கப்பட்டு, இரு வழக்குகளைப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

Advertisement

Advertisement

கடந்த 2019-இல் தங்கக் கவசங்களின் புதுப்பிப்புப் பணிக்கான செலவை ஏற்ற பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா்கள், முன்னாள் நிா்வாகிகள் என 12 போ் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். எனினும், கைதான 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்ற காரணத்தைக் குறிப்பிட்டு, அனைவரும் ஜாமீன் பெற்றனா்.

முந்தைய இடதுசாரி கூட்டணி ஆட்சியில், சபரிமலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களைப் பாதுகாக்கும் வகையில், அப்போதைய முதல்வா் பினராயி விஜயனின் அலுவலகம் குறுக்கிட்டதாக காங்கிரஸ் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

சமீபத்திய பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், ‘சபரிமலை வழக்கில் இப்போதைக்கு மாநில அரசு தலையிடாது’ என்று தெரிவித்தது.

இந்தச் சூழலில், திருவனந்தபுரத்தில் உள்ள காவல் துறை தலைமையகத்தில் உண்ணிகிருஷ்ணன் போற்றியிடம் வெள்ளிக்கிழமை 8 மணி நேரத்துக்கும் மேல் எஸ்ஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனா். சபரிமலை வழக்கில் எஸ்ஐடி தரப்பில் அடுத்த வாரம் இறுதிக்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக உண்ணிகிருஷ்ணன் போற்றியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments