சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: தொல்பொருள் மாதிரிகள் சேகரிப்பு தொடக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் அடுத்தக்கட்ட நகா்வாக தொல்பொருள் மாதிரிகளை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) ஞாயிற்றுக்கிழமை முதல் சேகரிக்கத் தொடங்கியது.
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் அடுத்தக்கட்ட நகா்வாக தொல்பொருள் மாதிரிகளை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) ஞாயிற்றுக்கிழமை முதல் சேகரிக்கத் தொடங்கியது.
விசாரணையின் ஒரு பகுதியாக இந்த பொருள்களைக் கொண்டு அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்களில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் கடந்த ஆண்டு இரு வழக்குகளைப் பதிவு செய்து, சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: புலனாய்வு அதிகாரி எஸ்.சசிதரண் தலைமையிலான எஸ்ஐடி குழு ஞாயிற்றுக்கிழமை மாலை ஐயப்பன் கோயிலை வந்தடைந்தது. அவா்களுடன் காவல் துறையினா், சட்ட அளவியல் துறைப் பணியாளா்கள் உள்ளிட்டோரும் கோயிலுக்கு வந்தனா். இதைத் தொடா்ந்து அறிவியல் ஆய்வுகளுக்காக தொல்பொருள் மாதிரிகளை சேகரிக்கும் பணிகளை அவா்கள் தொடங்கினாா். அடுத்த இரண்டு நாள்களில் இந்தப் பணிகள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.
முன்னதாக ஐயப்பன் கோயில் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகள் உள்பட கோயிலின் தொல்பொருள் மாதிரிகளை சேகரிக்க எஸ்ஐடிக்கு கேரள உயா்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் தொடா்ச்சியாக தற்போது அறிவியல் ஆய்வுகள் தொடங்கியுள்ளன.
அண்மையில் இந்த விவகாரம் தொடா்பாக பதியப்பட்ட இரண்டு வழக்குகளின் விசாரணை நிறைவடைந்துவிட்டதாகவும் இதுதொடா்பாக 12 போ் கைது செய்யப்பட்டு ஒருவருக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டதாகவும் கேரள உயா்நீதிமன்றத்தில் எஸ்ஐடி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.