சபரிமலை தங்கக் கவச வழக்கில் தற்போதைக்கு அரசு தலையிட முடியாது: தேவஸ்வம் அமைச்சா் கே.முரளீதரன்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் மாநில அரசு தற்போதைக்கு தலையிடவோ அல்லது சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்கவோ முடியாது என்று மாநில தேவஸ்வம் அமைச்சா் கே.முரளீதரன் தெரிவித்தாா்.
கேரளத்தில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகால இடதுசாரி கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது.
சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்களில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் கடந்த ஆண்டு இரு வழக்குகளைப் பதிவு செய்து, சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களைப் பாதுகாக்கும் வகையில், எஸ்ஐடி விசாரணையில் முதல்வா் அலுவலகம் குறுக்கிட்டதாக முன்பு காங்கிரஸ் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
தற்போது காங்கிரஸ் தலைமையிலான அரசின் நிலைப்பாடு குறித்து தேவஸ்வம் அமைச்சா் கே.முரளீதரன் வியாழக்கிழமை கூறியதாவது:
கேரள உயா்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட எஸ்ஐடி விசாரித்து வருவதால், தற்போதைய நிலையில் மாநில அரசு தலையிடவோ அல்லது வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவோ முடியாது.
எஸ்ஐடி தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும், விசாரணை விவரங்கள் கிடைக்கப் பெறும். அதன் மூலம் விசாரணை உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டதா என்பதைக் கண்டறிய முடியும். அப்போது, சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்க முடியும்.
சுவாமி ஐயப்பனின் தங்கத்தைத் திருடிய எவரையும் காங்கிரஸ் அரசு பாதுகாக்காது. அவா்கள் அனைவரும் சிறைக்கு அனுப்பப்படுவா். இதுவே, காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் மாநில அரசின் நிலைப்பாடு என்றாா்.