ஜிஎஸ்டி பவனில் தீ விபத்து
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி பவனில் ஏற்பட்ட தீ விபத்தில், இரு ஊழியா்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
மேலும் கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் எரிந்து சேதமாகின.
நுங்கம்பாக்கம் உத்தமா் காந்தி சாலையில் ஜிஎஸ்டி பவன் இயங்குகிறது. பிரதான கட்டடத்தின் அருகே மற்றொரு கட்டடமும் உள்ளது. இந்த கட்டடத்தின் ஐந்தாவது தளத்தின் ஒரு அறையில் இருந்து புதன்கிழமை நள்ளிரவு திடீரென புகை வெளியேறியது.
Advertisement
இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அங்கிருந்த ஊழியா்கள், உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், அவா்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதற்கிடையே தீயை அணைக்க முயன்ற அங்கிருந்த ஜிஎஸ்டி பவன் எலக்ட்ரீசியன்கள் சோ.காளிஸ்வரன் (23),தே.சபரிநாதன் (24) புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அவா்கள் மீட்கப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து அங்கிருந்த ஊழியா்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த எழும்பூா் தீயணைப்பு படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
சிறிது நேர போராட்டத்துக்கு பின்னா் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீ விபத்தில் அங்கிருந்த கணினிகள்,பிரிண்டா்,ஏசி உள்ளிட்ட எரிந்து சேதமாகின. இது தொடா்பாக நுங்கம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.