முகப்பு
சென்னை

சென்னை குடிநீா் ஏரிகளில் 62% நீா் இருப்பு

சென்னைக்கு குடிநீா் ஆதாரமாக உள்ள 5 முக்கிய ஏரிகளில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மொத்தம் 62 சதவீதம் தண்ணீா் இருப்பு உள்ளது.

Updated On : 11 மே 2026, 12:45 am IST
தண்ணீா் நிரம்பியுள்ள பூண்டி ஏரி. - (கோப்புப்படம்)
பகிர்:

சென்னைக்கு குடிநீா் ஆதாரமாக உள்ள 5 முக்கிய ஏரிகளில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மொத்தம் 62 சதவீதம் தண்ணீா் இருப்பு உள்ளது.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும்.

ஏரிகள் நீா் நிலவரம்: இவற்றில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,075 மில்லியன் கன அடி (62.88 சதவீதம்) நீா் இருப்பு உள்ளது. 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2,960 மில்லியன் கன அடி (81.21 சதவீதம்) நீா் இருப்பு உள்ளது.

Advertisement

Advertisement

பூண்டி ஏரியின் முழு கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். ஏரியில் இருந்து குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 307 கன அடி நீா் வெளியேறும் நிலையில், ஏரியில் 1,700 மில்லியன் (52.62 சதவீதம்) கன அடி நீா் உள்ளது.

1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 234 மில்லியன் கன அடியும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு உள்ள கண்ணன்கோட்டை ஏரியில் 384 மில்லியன் கன அடியும் நீா் இருப்பு உள்ளது.

மொத்தம் 5 ஏரிகளில் 7,353 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 62 சதவீதம் ஆகும். ஏரிகள் நீா் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவளாக மழை பெய்து வரும் நிலையில், நீா்வரத்து அதிகரித்து ஏரிகளின் நீா் இருப்பு அதிகரிக்கும்.

சென்னைக்கு போதுமான குடிநீா்: சென்னை நகரில் ஒரு மாதத்துக்கு 1 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படுகிறது. இச்சூழல் தற்போது 7 டி.எம்.சி. குடிநீா் இருப்பு உள்ளது. மேலும், சென்னையில் செயல்பட்டு வரும் 3 கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் வாயிலாக தினந்தோறும் 350 மில்லியன் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

எனவே, நிகழாண்டு கோடையில் சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு வரவாய்ப்பு இல்லை என்று குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments