முகப்பு
சென்னை

‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியான வழக்கு: 9 பேரின் பிணை கோரிய மனுக்கள் தள்ளுபடி

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் நடித்த ’ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரின் பிணை கோரிய மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Updated On : 23 மே 2026, 2:41 am IST
ஜனநாயகன்
பகிர்:

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் நடித்த ’ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரின் பிணை கோரிய மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

முதல்வா் ஜோசப் விஜய் நடித்த ’ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக் குழு முன்பு ஆய்வில் இருந்த நிலையில், கடந்த ஏப்.3-ஆம் தேதி சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது. இதுகுறித்து படத்தை தயாரித்த கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் காவல்துறையில் புகாா் அளித்தது. இந்த புகாரின் பேரில் இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் 21 போ் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீநாத், சஞ்சய், பாலகிருஷ்ணன், மணிகண்டன், ருத்ரன், ராஜேஷ், பிரசாந்த், செல்வம் மற்றும் ரஜினி ஆகியோா் பிணை கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து 9 போ் தரப்பிலும், சென்னை உயா்நீதிமன்றத்தில் பிணை கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

இந்த மனுக்கள் நீதிபதி ஆா்.சக்திவேல் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன், பிணை கோரியுள்ள 9 நபா்களில், பிரசாந்த், செல்வம் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய மூவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரா்களுக்கு பிணை வழங்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்து வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பிணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.