தீபாவளி சீட்டு நடத்தி ரூ 2 கோடி மோசடி: பணம் கட்டி ஏமாந்தவர்கள் போராட்டம்
மதுராந்தகம் நகரில் தீபாவளிச் சீட்டு நடத்தி தங்கநகை, சிலபொருட்களை வழங்குவதாக கூறி 100-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.2 கோடி வசூலித்துவிட்டு ஏமாற்றி
மதுராந்தகம் நகரில் தீபாவளிச் சீட்டு நடத்தி தங்கநகை, சிலபொருட்களை வழங்குவதாக கூறி 100-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.2 கோடி வசூலித்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த கும்பலின் வீட்டை சீட்டு கட்டியவர்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
மதுராந்தகம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். அவரது மனைவி மலா, மகன் ஜெயகுமார். இவர்கள் 3 பேரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீட்டு நடத்தினர். அதன்படி மாதந்தோறும் ரூ.500, ரூ.750 என பல வகையிலான மாதாந்திர சீட்டுகளை நடத்தி வந்தனர். அதற்காக தங்க நகை, பட்டாசு, இனிப்பு, வீட்டு மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை வழங்குவதாகக் கூறி பலரிடமும் பணம் வசூலித்து வந்தனர்.
மதுராந்தகம், சித்தாமூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல நூறு பேர் இந்த தீபாவளி சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் 12 மாத சீட்டுகள் முடிவடைந்தன. தீபாவளி கொண்டாடப்படும் நவம்பர் மாதத்தில் சீட்டு கட்டியவர்களுக்கு உரிய பொருள்களை வழங்க வேண்டும். ஆனால் சீட்டு நிதி வசூலித்த மூன்று பேரும் அந்தப் பொருள்களைத் தரவில்லை.
இந்நிலையில், 3 பேரும் வீட்டை பூட்டி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். தகவலறிந்து சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் சங்கரின் வீட்டை ஞாயிர்றுக்கிழமை இரவு முற்றுகையிட்டனர். அவர்கள் அனைவரும் மதுராந்தகம் காவல் நிலையத்துக்கு சென்றனர். அப்போது, இது பற்றி முறையாக புகார் கொடுத்துவிட்டு செல்லுங்கள். அதன்படி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதி அளித்ததால், அனைவரும் கலைந்து சென்றனர். தீபாவளி சீட்டுக்காக சங்கர் குடும்பத்தினர் ஆயிரக்கணக்கானோரிடம் சுமார் ரூ.2 கோடி வசூல் செய்து மோசடி செய்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மதுராந்தகம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.