போலீஸாருக்கு ஒலிபெருக்கி கருவி: வணிகர்கள் வழங்கினர்
வணிகர்கள் சார்பில் போலீஸாருக்கு ஒலிபெருக்கி கருவிகள் வழங்கப்பட்டன.
வணிகர்கள் சார்பில் போலீஸாருக்கு ஒலிபெருக்கி கருவிகள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம், உத்தரமேரூர் பஜார் வீதிகள் காலை, மாலை, விழாக்காலங்களில் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், சாலையோர வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுபோன்ற போக்குவரத்து நெரிசலை, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தும் பணியை உத்தரமேரூர் போலீஸார் நாள்தோறும் சிரமத்துடன் மேற்கொண்டு வருகின்றனர். எனினும் போக்குவரத்து நெரிசல் குறைந்த பாடில்லை. எனவே போலீஸாருக்கு உதவிடும் வகையில் உத்தரமேரூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒலிபெருக்கி கருவிகளை நகர போலீஸாருக்கு சனிக்கிழமை வழங்கி உதவினர். இதன்மூலம், எளிதில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தலாம் என்பதோடு, இனி போலீஸாருக்கு சிரமம் இருக்காது என வணிகர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்து, ஒலிபெருக்கி கருவியை உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் அமல்ராஜிடம் வழங்கினார்.
இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், நாள்தோறும் பஜார் வீதிகளில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்துவது சவாலாக உள்ளது. இருப்பினும், பொதுமக்கள், வணிகர்கள் ஒத்துழைப்பு மூலம் எளிதாகியுள்ளது. அவ்வகையில், வணிகர்களின் இதுபோன்ற ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.