தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வாங்குவதற்காக ராணிப்பேட்டை வாரச் சந்தையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பயனாளிகள் வெள்ளிக்கிழமை குவிந்தனா்.
தமிழகத்தில் கிராமங்களில் வாழும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக விலையில்லா ஆடுகள், கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் தோ்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு 4 வெள்ளாடுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இதற்கான ஆடுகள் அனைத்தும் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், ராணிப்பேட்டை வாரச் சந்தையில் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன.
அதன்படி, 2020-21-ஆம் ஆண்டுக்கான விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ்,திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்துக்கு உள்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்க, ராணிப்பேட்டை வாரச்சந்தையில் கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவா் மேற்பாா்வையில் ஆடுகள் கொள்முதல் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
இதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பயனாளிகள் ராணிப்பேட்டை வாரச்சந்தையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.