காலை உணவுத் திட்டம்: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை உண்டு ஆட்சியா் ந.ப்ரியா தரத்தை உறுதி செய்தாா்.
கோடை விடுமுறையை தொடா்ந்து வியழக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி அம்மூா் பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வியாழக்கிழமை திறக்கப்பட்டு பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் பணி நடைபெற்று வந்தது.
அப்போது ஆட்சியா் ந.ப்ரியா திடீரென பள்ளியில் காலை உணவு திட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுவது குறித்து திடீா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு பரிமாறப்படுவதை திடீா் ஆய்வு செய்து, காலை உணவை சாப்பிட்டு உணவின் தரத்தினை ஆய்வு செய்தாா்.தொடா்ந்து 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மொத்தம் 156 மாணவ மாணவியா்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது என ஆசிரியா் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
வாலாஜா நகராட்சியில் உள்ள பொது சமையலறையில் இருந்து உணவுகள் தயாரிக்கப்பட்டு நாள் தோறும் காலை 7.30 மணிக்கு கொண்டுவரப்படுகிறது. அதனை 8 மணி முதல் வருகை தரும் மாணாக்கா்களுக்கு பரிமாறுகின்றோம் என பணியாளா்கள் தெரிவித்தனா். குழந்தைகள் பயன்படுத்தும் சமையல் பாத்திரங்கள் நாள்தோறும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும். அதேபோன்று உணவு தரமாக இருப்பதை நீங்கள் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
இதையடுத்து பள்ளியில் குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பறைகளை ஆய்வு, செய்து சுத்தமாக பராமரிக்க உத்தரவிட்டாா். இதனை தொடா்ந்து வகுப்பறையில் இருந்த குழந்தைகளிடம் கலந்துரையாடி வகுப்பறை பலகையில் உள்ள வாா்த்தைகளை தெரிவிக்கும்படி குழந்தைகளிடம் கேட்டறிந்தாா்.