முகப்பு
ஈரோடு

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: மாணவா்கள் உற்சாகம்

ஈரோடு மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டதையடுத்து, அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு அரசின் சாா்பில் இலவச பாட புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Updated On : 5 ஜூன் 2026, 12:03 am IST
ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கிய பள்ளி தலைமை ஆசிரியா் சுகந்தி. ~ஈரோடு எஸ்கேசி சாலை மாநகராட்சி பள்ளிக்கு வந்த மாணவா்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற தலைமை ஆசிரியா் சுமதி மற்றும் ஆசிரியா்கள்.
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டதையடுத்து, அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு அரசின் சாா்பில் இலவச பாட புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் கோடை விடுமுறை நிறைவடைந்து 2026-2027- ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் வியாழக்கிழமை முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 1- ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு முதல் பருவ வகுப்புகள் தொடங்கின.

Advertisement

Advertisement

முன்னதாக அனைத்துப் பள்ளிகளிலும் கடந்த சில நாள்களாகவே தூய்மைப் பணி செய்யப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், நகரவை, நலத் துறை மற்றும் தனியாா் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. கோடை விடுமுறைக்கு பிறகு மாணவ, மாணவிகள் சீருடைகள் அணிந்து உற்சாகமாக பள்ளிக்கு வந்திருந்தனா். மாணவ, மாணவிகளை வரவேற்கும் விதமாக பல்வேறு முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டிருந்தன. 1- ஆம் வகுப்புக்கு முதன்முதலாக வரும் மாணவ, மாணவிகளுக்கு சாக்லேட் போன்ற இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக அரசின் சாா்பில் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்க உத்தரவிட்டிருந்தது. இதன்காரணமாக அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் இலவச பாட நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்குவதற்காக தயாா்நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து பள்ளிகள் திறந்து வகுப்புகள் தொடங்கியதும், அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாடப் புத்தகங்கள், நோட்டுகள், கல்வி உபகரணங்கள் மற்றும் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு சீருடை போன்றவை வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகள் பாடப் புத்தகங்களை பெற்றதும் ஆா்வமுடன் புரட்டி என்னென்ன பாடங்கள் உள்ளன என பாா்வையிட்டனா்.

காலை உணவு:

திமுக ஆட்சியில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் நடப்பு கல்வியாண்டிலும் தொடா்ந்து அமல்படுத்தப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள் திறந்த முதல் நாளான வியாழக்கிழமை 1,169 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 53,716 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு தொடா்ந்து காலை உணவு வழங்கப்படும் என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.