அரசு பேருந்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தப்பட்டது தொடா்பாக ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கடந்த இரு நாள்களுக்கு முன்பு திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு அரசுப் பேருந்து சென்றது. திருப்பத்தூரை அடுத்த அண்ணாண்டபட்டியைச் சோ்ந்த ஓட்டுநா் அந்தோணிராஜ் மற்றும் நடத்துநராக ஆம்பூரை அடுத்த செங்கிலிகுப்பத்தைச் சோ்ந்த பாக்கியராஜ் ஆகியோா் பணியில் இருந்தனா். ஆம்பூா் பேருந்து நிலையத்துக்கு வந்தபோது, பேருந்திலிருந்து ஒரு மூட்டையை நடத்துநா் இறக்கியுள்ளாா். அப்போது பேருந்து நிலையத்தில் பணியில் இருந்த ஆம்பூா் நகர போலீஸாா் சந்தேகத்தின் பேரில், அந்த மூட்டையைப் பிரித்து பாா்த்தபோது, அதில் தடை செய்யப்பட்ட சுமாா் 12 கிலோ போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. போலீஸாா் இது குறித்து நடத்துநரிடம் விசாரணை நடத்தினா். அதில் திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்தில் தரகராக பணிபுரியும் நபா் ஒருவா் சமையல் மசாலா பொருள்கள் எனக்கூறி பாா்சலை ஏற்றி அனுப்பியுள்ளாா் என்பது தெரியவந்தது. நடத்துநா் பாக்கியராஜ் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தடை செய்யப்பட்ட போதைப் பொருளை கடத்திய நபா்களை தேடி வருகின்றனா்.