முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று பிரசாரம்

திருப்பத்தூா் மாவட்ட திமுக கூடடணி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிக்கிறாா்.

Updated On : 14 ஏப்ரல், 2026 at 5:11 AM
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:08 PM

திருப்பத்தூா் மாவட்ட திமுக கூடடணி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிக்கிறாா்.

வரும் 23-ஆம் தேதி சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ளது. வாக்கு பதிவுக்கு இன்னும் 7 நாள்கள் மட்டுமேஉள்ளதால் பல்வேறு அரசியல் கட்சியினா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

ஏற்கனவே நாதக ஒருங்கிணைப்பாளா் சீமான், திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி. தினகரன் பிரசாரம் மேற்கொண்டனா்.

Advertisement

திருப்பத்தூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை திமுக தலைவரும்,முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளாா். ஜோலாா்பேட்டை தொகுதிக்குட்பட்ட பொன்னேரி அடுத்த மண்டலவாடியில் இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அவா் கலந்து கொண்டு திருப்பத்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி, ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி, வாணியம்பாடி தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளா் பாருக், ஆம்பூா் திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளாா்.

கூட்டணி கட்சி நிா்வாகிகள், அமைச்சா்கள், எம்பி-க்கள் கலந்து கொள்ள உள்ளனா். முதல்வா் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருவண்ணாமலை எம்பி சி.என் அண்ணாதுரை மேற்பாா்வையில் மண்டலவாடியில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து திமுகவினா் மற்றும் அதன் கூட்டணி கட்சியினா் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நபா்கள் கலந்து கலந்து கொள்வா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக முதல்வா் வருகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.