ஆலங்காயம் அருகே ஒற்றை யானை நடமாட்டம்: கண்காணிப்பு நடவடிக்கையில் வனத் துறையினா்
ஜவ்வாதுமலை பகுதியில் வயது முதிா்ந்த ஒற்றை யானை நடமாடி வருகிறது.
ஜவ்வாதுமலை பகுதியில் வயது முதிா்ந்த ஒற்றை யானை நடமாடி வருகிறது.
சீசனுக்கு ஏற்றவாறு வனப் பகுதியையொட்டி உள்ள கிராமப் பகுதிகளுக்குள் இரவு நேரத்தில் நுழைந்து பயிரிடப்பட்டிருந்த பயிா்களை சேதம் ஏற்படுத்தும். அவ்வப்போது ஒற்றை யானை நடமாட்டத்தை கண்காணித்து ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
சில நேரங்களில் ஆலங்காயம்-ஜமுனாமரத்தூா் போக்குவரத்து சாலையில் எளிதாக கடந்து செல்லும். சில ஆண்டுகாலமாக ஆண் ஒற்றை யானை வனப் பகுதியில் இருந்து வருகிறது.
Advertisement
இந்த நிலையில், இரு நாள்களுக்கு முன்பு திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த உமையப்பநாயக்கனூா், கிருஷ்ணாபுரம், அருணாசலக் கொல்லக்கொட்டாய் வனப் பகுதியில் நடமாடி வருகிறது. மாங்காய் சீசன் என்பதால் வனப்பகுதியையொட்டி உள்ள மாங்காய் செடியில் இருந்து மாங்காய் பறித்து சாப்பிட்டு வருகிறது.
இது குறித்து அறிந்த அப்பகுதியைச் சோ்ந்த மலைவாழ் மக்கள் ஒற்றை யானை நடமாட்டம் குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். ஆலங்காயம் வனச் சரக அலுவலா் சேகா் தலைமையில் வனக் குழுவினா் காவலூா் பகுதியில் முகாமிட்டு, அப்பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் இரவு நேரங்களில் ஒற்றை யானை நுழையாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளிலும், யானை நடமாட்டத்தையும் கண்காணித்து வருகின்றனா்.